மருத்துவமனையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்திக்க சென்ற அமைச்சர் சேகர் பாபுவுக்கு அனுமதி மறுப்பு


சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இதை தொடர்ந்து அந்த சோதனை தொடர்பாக செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், விசாரணை முடிவில் அவர் கைது செய்யப்பட்டார். இதனிடையே அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதன் காரணமாக வர் ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மேற்கொள்ளப்பட்ட அஞ்சியோகிராம் பரிசோதனையில் ரத்தக் குழாய்களில் 3 அடைப்புகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. அதில், 3 முக்கியமான ரத்த குழாய்களில் அடைப்பு இருப்பதை அடுத்து, செந்தில் பாலாஜிக்கு உடனடியாக இதய அறுவை சிகிச்சை செய்யவும் ஓமந்தூரார் மருத்துவமனை மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர்.

இதற்கு இடையே செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்ததை உறுதி செய்த நீதிபதி, அவரை வருகிற 28ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரைவிட்டார். இதனையடுத்து அவர் புழல் சிறை காவலர்களின் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்திக்க சென்ற அமைச்சர் சேகர் பாபுவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்திப்பதற்காக அமைச்சர் சேகர் பாபு சென்றுள்ள நிலையில், அவரை சந்திக்க அமலாக்கத்துறையினர் அனுமதி மறுத்து உள்ளனர். குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்திக்க அனுமதி வழங்கப்படும் என்றும், மற்றவர்களுக்கு அனுமதி வழங்கபடாது எனவும் அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு, நீதிமன்ற காவலில் இருப்பதால் செந்தில் பாலாஜியை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டது. உடனடியாக செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளோம். அவரது உறவினர்களை சந்தித்து உடல்நிலை குறித்து விசாரித்தோம் என அவர் கூறினார்.