மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி சார்பில் விவசாயிகளுக்கு ஆதரவாக அறவழியில் உண்ணாவிரத போராட்டம்

டெல்லியில் போராடி வரும் விவசாயிளுக்கு ஆதரவாக, தமிழக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சித் தலைவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். தமிழக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சித் தலைவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டுப் போராடி வரும் விவசாயிகளுக்காக, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் உள்ள அனைத்துக் கட்சிகளும் உணர்வு பூர்வமாக தொடர்ந்து ஆதரித்து கூட்டாகவும், தனியாகவும் போராட்டங்களை நடத்தி வந்தாலும், இதுவரை மத்திய பா.ஜ.க. அரசு குறைந்தபட்ச ஆதார விலையே இல்லாத சட்டங்களையும், இலவச மின்சாரத்தை ரத்து செய்ய கொண்டு வரப்படும் மின்சாரத் திருத்தச் சட்டத்தையும் திரும்பப் பெற முன்வரவில்லை.

போராட்டத்தைக் கையாளும் மத்திய பா.ஜ.க. அரசினையும் அதை ஒரு வார்த்தை கூட தட்டிக் கேட்காத முதலமைச்சர் பழனிச்சாமியையும் கண்டித்தும், டெல்லியில் கொரோனா காலத்திலும் உயிரைத் தியாக வேள்வியாக முன்னிறுத்தி, அறவழியில் போராடி வரும் விவசாயிகளுக்கும் அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு ஆதரவு அளித்தும் 18.12.2020(வெள்ளிக்கிழமை) அன்று சென்னை- வள்ளுவர் கோட்டத்தில் காலை 8.00 மணி முதல் மாலை 5.00 வரை அறவழியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சித் தலைவர்களும், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்கும் ஒரு நாள் அடையாள “உண்ணாநிலைப் போராட்டம்” நடைபெறும்.

ஜனநாயக நெறிகளைப் பின்பற்றி, அறவழியில் விவசாயப் பெருமக்களுக்கு, தொடர்ந்து ஆதரவளிப்போம்! அவர்களின் கோரிக்கைகள் வெற்றி பெற எந்நாளும் துணை நிற்போம்! என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.