என் மகள் சாவில் சந்தேகம் உள்ளது; நடிகை சித்ராவின் தாய் தகவல்

சின்னத்திரை பிரபல நடிகை சித்ராவின் உயிரிழப்பில் சந்தேகம் உள்ளது என்று அவரது தாய் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

பிரபல சின்னத்திரை நடிகை விஜே சித்ரா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காலை முதலே மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இவருக்கும் சென்னையை சேர்ந்த ஹேம்நாத் என்ற தொழில் அதிபருக்கும் கடந்த ஆகஸ்ட் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

இதையடுத்து அடுத்த மாதம் திருமணம் நடக்கவிருந்த நிலையில் சித்ரா தற்கொலை செய்துகொண்டது பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து சித்திராவின் நெருங்கிய நண்பர்கள் கூறும்போது, சித்ரா நிச்சயதார்த்ததுடன் திருமணத்தை நிறுத்த வேண்டும் என்ற மனநிலையில் இருந்தார். சீரியலில் நடித்த சில காட்சிகளுக்கு ஹேம்நாத் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், அத்துடன் திருமண தேதி குறித்து ஏற்படும் சிக்கல்கள் காரணமாகவும் சில பிரச்சினைகள் சென்று கொண்டிருந்ததாக தெரிவித்தார்

திருமணம் தொடர்பாக பற்றி பேச ஹேமநாத் குடும்பத்தினர் பூந்தமல்லி ஹோட்டலுக்கு வந்து இருந்தனர். அப்போது தான் சித்ரா தற்கொலை முடிவு எடுத்துள்ளார். இதனால் சித்ரா மரணம் குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர் .

அத்துடன் சித்ராவின் இறப்பு குறித்து பேசியுள்ள அவரது தாய், தனது மகள் வலிமையான மனநிலை கொண்டவர். எப்படி இறந்தார் என்ற சந்தேகம் உள்ளது என்று கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
நடிகை சித்ரா திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்ட பிறகு கடந்த அக்டோபர் 19ம் தேதி பதிவு திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனால் சித்ரா தற்கொலை குறித்து ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.