இயல்பை விட 8 சதவீதம் அதிகம் பெய்துள்ள வடகிழக்கு பருவமழை

வழக்கத்தை விட அதிகம்... தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வழக்கத்தைவிட 8 சதவீதம் அதிகம் பெய்துள்ளது என்று தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது; வளி மண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 2 தினங்களுக்கு தென் தமிழகம் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

கடலோர மாவட்டங்களான விழுப்புரம், புதுவை, காரைக்கால், கடலூர், நாகை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

மேலும், சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரையில் நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் இயல்பை விட 8 சதவீதம் அதிகம் பெய்துள்ளது. சென்னையில் 41 சதவீதம் அதிகம் பெய்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.