மாற்றுக்கட்சி நிகழ்ச்சியில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் பங்கேற்கவில்லை என்று அறிவிப்பு

சென்னை: அவர்கள் விஜய் மக்கள் இயக்கத்தினர் அல்ல... மாற்றுக்கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் அல்ல என விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விளக்கமளித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஊழலுக்கு எதிராக ‘என் மண், என் மக்கள்’ என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் பாதயாத்திரை மேற்கொள்கிறார்.

அதன்படி ராமநாதபுரத்தில் கடந்த 28ஆம் தேதி நடைப்பயணத்தை தொடங்கிய அவர் 110-வது நாளில் சென்னையில் பாதயாத்திரையை நிறைவு செய்கிறார். தற்போது அவர் மதுரையில் நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் அண்ணாமலை நடைப்பயணத்தில் விஜய் மக்கள் இயக்க கொடியுடன் சிலர் பங்கேற்றது பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இதுதொடர்பான விடியோ இணையதளங்களில் வெளியானது. இந்த நிலையில் மாற்றுக்கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் அல்ல என விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விளக்கமளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், விஜய் மக்கள் இயக்கக் கொடியோடு மாற்றுக்கட்சி நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டதாக ஊடகங்கள் மற்றும் சமூக ஊடக செய்திகளில் வெளியான நபர்கள் விஜய் மக்கள் இயக்கத்தின் எந்த பொறுப்பிலும் இல்லை, மற்றும் அவர்களுக்கும் மக்கள் இயக்கத்திற்க்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் விஜய் அரசியலில் விரைவில் களமிறங்குவார் என கூறப்படும் நிலையில் பாஜக நிகழ்ச்சியில் விஜய் மக்கள் இயக்க கொடியுடன் சிலர் பங்கேற்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.