கொரோனா சிகிச்சை பெற்றவர்களில் இன்று 41 பேர் குணமடைந்தனர்

41 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்... கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 41 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர்.

கோவையில் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் நேற்று மட்டும் 52 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 1,644 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டோருக்கு இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இம்மருத்துவமனையானது கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிப்பதற்காக தற்போது பிரத்யேகமாக செயல்பட்டு வருகிறது. இங்கு கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மக்கள் சிகிச்சை பெற்று வரும் சூழலில் தற்போது வரை 300க்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் இன்று மட்டும் 41 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து இஎஸ்ஐ மருத்துவமனையின் முதல்வர் நிர்மலா கூறுகையில், “இன்று 16 ஆண்கள், 19 பெண்கள், இரண்டு சிறுமிகள் மற்றும் நான்கு சிறுவர்கள் என மொத்தம் 41 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்” என்றார்.