கடந்த 11-ந்தேதி அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் தொடர்பான வழக்கு .. சென்னை ஐகோர்ட் இன்று தீர்ப்பு வழங்கியது

சென்னை: அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்வதற்காக கடந்த 11-ந்தேதி அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் நடந்தது. இதை அடுத்து இந்த அ.தி.மு.க. பொதுக் குழுவுக்கு தடை விதிக்கக்கோரி கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பொதுக் குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

ஆனால் இதை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, உள்கட்சி விவகாரத்தில் தலையிட முடியாது என கூறி வழக்கை தள்ளுபடி செய்தார். இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, இந்த வழக்கை ஐகோர்ட்டு மீண்டும் விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

எனவே இதனையடுத்து இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு பட்டியலிடப்பட்டது. ஆனால், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வேறு நீதிபதி விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதன்படி, இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு பட்டியலிடப்பட்டது. இந்த வழக்கை கடந்த 10 மற்றும் 11-ந்தேதிகளில் நீதிபதி விசாரித்தார். பின் இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

இந்த நிலையில் இன்று காலை 11.30 மணிக்கு தீர்ப்பு வழங்கபட்டது.இந்த தீர்ப்பை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் இன்று பிறப்பித்தார். அதன் படி அவர் கூறியதாவது:

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்துதான் பொதுக்குழு, செயற்குழுவை கூட்ட வேண்டும்.

ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தனித்தனியாக கூட்டம் கூட்ட கூடாது.

பொதுக்குழுவை கூட்ட ஆணையரை நியமிக்க வேண்டும். ஜூன் 23-ந்தேதிக்கு முன்பு இருந்த நிலையே நீடிக்க வேண்டும் என நீதிபதி கூறினார்.