இவர்கள் மட்டும் நடைபயணத்தில் பங்கேற்க வேண்டும் ... மத்திய அரசு ராகுலுக்கு கடிதம்

இந்தியா: ஜப்பான், அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளில் மீண்டும் கொரானா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவில் கொரோனா பரிசோதனைக்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளில் மேலும் தீவிரம் காட்டுமாறு மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது.

இதனை அடுத்து கொரோனா பாதித்தவரின் ரத்த மாதிரிகளை மாநிலங்கள் மரபணு ஆய்வகத்திற்கு தினசரி அனுப்ப வேண்டும் எனவும், அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கு, மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூசன் நேற்று கடிதம் எழுதியிருந்தார்.

அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, 3 ராஜஸ்தான் எம்.பி.க்கள் எனக்கு கடிதம் எழுதியிருந்தனர். அதில், காங்கிரஸின் இந்திய ஒற்றுமை பயணத்தில் பங்கேற்பாளர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த யாத்திரையில் கலந்து கொண்ட பிறகு ஹிமாச்சல பிரதேச முதல்வருக்கும் கொரோனா தொற்ற உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனவே இந்நடைபயணத்தை கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் நடத்த வேண்டும் என்றும் தடுப்பூசி போட்டவர்களே இதில் பங்கேற்க வேண்டும் என்றும் , இல்லையென்றால் தற்காலிகமாக இதனை ஒத்தி வைக்க வேண்டும் என்றும் ராகுல் காந்திக்கு கடிதம் எழுதியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தகவல் தெரிவித்துள்ளார்.