கொரோனாவில் இருந்து மீண்ட அதிபர் டிரம்ப் முகக்கவசம் அணியாமல் தேர்தல் பிரசாரம்

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. உலகளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்த கொரோனா பரவலுக்கு மத்தியில் அமெரிக்காவில் வரும் நவம்பர் 3-ஆம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்கவுள்ளது.

அமெரிக்காவில் கொரோனா தொற்ற விஸ்வரூபம் எடுத்தபோதும் கூட முகக்கவசம் அணியமாட்டேன் என்று கூறிய அதிபர் டிரம்ப், நாட்கள் செல்ல செல்ல எதிர்க்கட்சிகள் வற்புறுத்தல், உலகத் தலைவர் என்பதால் மாஸ்க் அணிந்தார். இந்நிலையில் கடந்த வாரத்தில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வெள்ளை மாளிகை திரும்பிய டொனால்டு டிரம்ப் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளார்.

கொரோனாவிலிருந்து மீண்ட அவர், அடுத்த மாதம் நடைபெற இருக்கும் அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தில் கலந்து கொள்ள தீவிரம் காட்டி வருகிறார். இந்நிலையில், புளோரிடாவில் தேர்தல் பிரசாரத்திற்கான முன்னோட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது மாஸ்க் அணியாமல் மேடையில் தோன்றினார்.

அப்போது பேசிய அதிபர் டொனால்டு டிரம்ப், பவர்புல் ஆக இருப்பதாக உணர்கிறேன். ஒவ்வொருவரையும் முத்தமிட விரும்புகிறேன் என்று தனது வழக்கமான நகைச்சுவை உணர்வுடன் கூறினார். கொரோனாவில் இருந்து முற்றிலும் குணமடைந்ததால் அப்படி தெரிவித்துள்ளார். இருப்பினும் இதனை எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.