மறுமணத்துக்கு முன் அனுமதி பெற வேண்டும் - பீகார் அரசு ஊழியர்களுக்கு புதிய உத்தரவு..

பீகார்: இரண்டாவது திருமணம் செய்ய விரும்பும் அரசு ஊழியர்கள், அவர் துறை சார்ந்த அதிகாரிகளிடம் முன் அனுமதி பெறவேண்டும் என பீகார் அரசு புதிய சட்டமியற்றியுள்ளது.இரண்டாவது திருமணம் செய்து கொள்ள விரும்பும் பீகார் அரசு ஊழியர்கள் இப்போது அந்தந்த துறை உயர் அதிகாரிகளுக்கு அறிவித்து, தேவையான அனுமதியைப் பெற்ற பின்னரே இரண்டாவது திருமணம் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என சட்டமியற்றியுள்ளது.

இது தொடர்பாக வெளியான அறிவிப்பில், அனைத்து அரசு அதிகாரிகளும் தங்களது திருமண நிலை குறித்து அந்தத்துறை அதிகாரிகளுக்குத் தெரிவித்து, தேவையான அனுமதி பெற்ற பின்னரே இரண்டாவது திருமணத்திற்குத் தகுதி பெறமுடியும். முதல் திருமணம் செய்த இணையரை விவாகரத்து செய்திருக்க வேண்டியது அவசியம். முதல் திருமணம் செய்த இணையரிடம் முறையான அனுமதி பெற்ற பின்னரே இரண்டாவது திருமணம் செய்துகொள்ள முடியும்.

பணியாளரின் முதல் மனைவி அல்லது கணவன் எதிர்த்தால், இரண்டாவது மனைவி அல்லது கணவனுக்கு அரசு சலுகைகள் மறுக்கப்படும். அதேபோல, அரசு ஊழியர் சம்பந்தப்பட்ட துறையின் அனுமதியின்றி இரண்டாவது திருமணம் செய்து பணியின் போது இறந்தால், அவரின் இரண்டாவது மனைவி, கணவன் மற்றும் அவர்களது குழந்தைகளுக்குக் கருணை அடிப்படையில் வேலை கிடைக்காது. முதல் மனைவியின் குழந்தைகளுக்கே மாநில அரசு முன்னுரிமை அளிக்கும்.

இந்த சட்டத்தை, அனைத்துப் பிரிவு ஆணையர்கள், மாவட்ட ஆட்சியர்கள், துணைப் பிரிவு மாஜிஸ்திரேட்டுகள், காவல்துறை இயக்குநர் ஜெனரல் (டிஜிபி), டிஜிபி ஊர்க்காவல்படை, டிஜிபி சிறைத்துறை மற்றும் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு அதிகாரியும் அந்தந்த அதிகார வரம்புகளில் இதை அமல்படுத்த பொது நிர்வாகம் உத்தவிட்டுள்ளது.