நள்ளிரவில் ஆவணங்களை அழித்த ஊராட்சி செயலரிடம் போலீசார் விசாரணை

சிவகங்கை: ஆவணங்களை அழித்த ஊராட்சி செயலர்... உயர் நீதிமன்றம் விசாரணைக்கு உத்தரவிட்ட நிலையில் நள்ளிரவில் முக்கிய ஆவணங்களை அழிக்க முயன்ற போது கையும் களவுமாக பிடிபட்ட ஊராட்சி செயலரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகில் உள்ள சங்கராபுரம் பஞ்சாயத்தில் ஒரு கோடியே 36 லட்சம் முறைகேடு நடந்துள்ளதாக கூறி காரைக்குடியைச் சேர்ந்த ராமநாதன் என்பவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பாண்டியராஜன் மீதும்,ஊராட்சி செயலர் அண்ணாமலை மற்றும் முன்னாள் தனி அலுவலர் கேசவன் மீதும் நடவடிக்கை எடுக்க மனு தாக்கல் செய்து இருந்தார்.

இந்த வழக்கை விசாரித்து மாவட்ட ஆட்சியர் 4 வாரத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் முறைகேடு தொடர்பான ஆவணங்களை ஊராட்சி மன்ற செயலர் அண்ணாமலை அழிக்க முயன்றுள்ளார்.

இதனை ஊராட்சி மன்ற தலைவர் தேவி மாங்குடி தனது செல்போனில் உள்ள சிசிடிவியில் பார்த்து போலீசில் புகார் செய்துள்ளார். இதன் அடிப்படையில் ஊராட்சி செயலர் அண்ணாமலையிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.