பழங்குடியின மாணவர்களுக்கு எதிரான தாக்குதலுக்கு மன்னிப்பு கோரிய போப் ஆண்டவர்

ஒட்டாவா: வெட்கி தலை குனிந்து மன்னிப்பு கேட்கிறேன்... கனடாவில் கடந்த 19ம் நூற்றாண்டில் பழங்குடியின மாணவர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலுக்கு வெட்கி தலைகுனிந்து மன்னிப்பு கேட்பதாக போப் கூறியுள்ளார்.

கடந்த 1800 முதல் 1900 வரை கனடா அரசானது பழங்குடியினத்தை சேர்ந்த 1,50,000 குழந்தைகளை, வலுக்கட்டாயமாக குடும்பம், கலாசாரம் மற்றும் மொழி ஆகியவற்றில் இருந்து பிரித்து கத்தோலிக்க தேவாலயங்கள் சார்பில் செயல்படும் 139 பள்ளிகளில் சேர்க்கப்பட்டனர்.

அப்போது தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களால் உடல்ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டனர். புறக்கணிப்பு, உடல்நலக்குறைவு மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக ஆயிரக்கணக்கான குழந்தைகள் உயிரிழந்தனர். இது வாடிகனை நோக்கி பல்வேறு கேள்விகளை எழுப்பியது.

இந்நிலையில் கனடாவிற்கு 6 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள போப் பழங்குடியின மக்கள் இடையே பேசியதாவது: மிகுந்த வருத்தத்துடன் இந்த மன்னிப்பை கேட்கிறேன். கத்தோலிக்க பள்ளிக்கூடங்கள் இங்கிருந்த பழங்குடி மக்களின் மொழி மற்றும் கலாசாரம் அழிய காரணமாகி உள்ளன.

பழங்குடியின மக்களுக்கு எதிராக கிறிஸ்தவர்கள் செய்த கொடூர தீமைகளுக்கு வெட்கி தலைகுனிந்து மன்னிப்பு கேட்கிறேன். இந்த மன்னிப்பு, பழங்குடிகள் மீது நடத்தப்பட்ட கொடுமைகளை கண்டறிவதற்கான விசாரணையை துரிதபடுத்தவும் கடந்த காலங்களில் வலிகளை அனுபவித்த பழங்குடியின மக்களுக்கு சிறு மருந்தாகவும் உதவும். இவ்வாறு போப் பிரான்சிஸ் கூறினார்.