சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை புரட்டி எடுத்து வருகிறது. உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. குறிப்பாக அமெரிக்காவின் நியூயார்க் நகரம் பெரும் பாதிப்பை சந்தித்து வருகிறது. மக்கள் தொகை அடர்த்தி காரணமாக நியூயார்க் நகரில் வைரஸ் வேகமாக பரவி வருகிறது.
நியூயார்க்கில் 6 லட்சம் பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு 34 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வைரஸ் பரவல் சற்று குறைந்திருந்த போது நியூயார்க் நகரில் உள்ள பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வந்தது.
ஆனால், நியூயார்க் நகரில் கொரோனா மீண்டும் வேகமெடுக்கத்தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 5 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இரண்டாவது அலையால் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக மாணவர்களின் நலன் கருதி இன்று முதல் நியூயார்க் நகரில் உள்ள பள்ளிக்கூடங்கள் காலவரையின்றி மூடப்படுகிறது.
இந்த அறிவிப்பை அந்நகர மேயர் பில் டி பல்சியோ தெரிவித்துள்ளார். மேலும் அவர், முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பள்ளிக்கூடங்கள் மூடப்படுவதாகவும், மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்படும் என்று தெரிவித்தார்.