பிலிப்பைன்சில் சிறிய ரக விமானம் விபத்து: இந்திய மாணவர் பலி

பிலிப்பைன்ஸ்: பிலிப்பைன்சில் ஏற்பட்ட விமான விபத்தில் இந்திய மாணவர் உள்பட 2 பேர் பலியாகினர்.

பிலிப்பைன்ஸ் நாட்டில் சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. இதில் இந்திய மாணவரும் அவரது பயிற்சியாளரும் உயிரிழந்தனர்.

பிலிப்பைன்ஸ் நாட்டின் இலோகோஸ் வடக்கு மாகாணத்தில் லாவோக் என்ற நகரம் உள்ளது. இந்த நகரத்தில் செஸ்னா 152 எனப்படும் ஒரு சிறிய ரக பயிற்சி விமானத்தில் இந்திய மாணவர் அன்ஷும் ராஜ்குமார் பயிற்சி மேற்கொண்டு இருந்தார். அவருடன் விமானத்தின் பயிற்சியாளரும் உடன் இருந்துள்ளார்.

துகுகேராவ் விமான நிலையம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த அந்த விமானம், திடீரென கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. இதையடுத்து விமானத்தை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. இதில் விமானம் விபத்துக்கு உள்ளானது தெரியவந்தது. விபத்துக்கு உள்ளான விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்த விமானத்தில் பயணம் செய்த அன்ஷும் ராஜ்குமார் மற்றும் அவருடைய பயிற்சியாளர் இருவருமே பலியாகினர். இருவரது உடல்களையும் மீட்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.