செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீரானது சீராக வெளியேற்றம்

பூந்தமல்லி: உபரி நீரானது சீராக வெளியேற்றம் .... திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று இரவில் இருந்து கனமழை பெய்து கொண்டு வருகிறது. இதையடுத்து இந்நிலையில் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து மீண்டும் உயர் தொடங்கி உள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த நீர்மட்டமான 24 அடியில் தற்போது 19.87 அடியும் மொத்த கொள்ளளவான 3465 மில்லியன் கனஅடியில் தற்போது 2571 மில்லியன் கன அடியும் தண்ணீர் உள்ளது. மேலும் நீர்வரத்து 330 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் தொடர்ந்து 500 கன அடியாக உள்ளது.

இதனை அடுத்து கனமழை நீடிக்கும் என்பதால் தொடர்ந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் ஏரியின் நீர்மட்டம் வழக்கத்திற்கு மாறாக 20 அடிக்கு கீழ் சென்றுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்ட உயரத்தை 18 அடியில் இருந்து 19 அடி வரை வைத்து கண்காணிக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

மேலும் கனமழை நீடித்து நீர் வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் உபநீர் அதிகமாக திறந்தால் அடையார் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு விடக்கூடாது என்பதால் தொடர்ந்து செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீரானது 500 கன அடியாக சீராக வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் உபரி நீர் திறப்பு உயர்த்தப்படும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்து உள்ளனர்.