டெல்லி, புறநகர் பகுதிகளில் தள்ளுபடி விலையில் தக்காளி விற்பனை செய்ய நடவடிக்கை

புதுடெல்லி: டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் தக்காளியை தள்ளுபடி விலையில் விற்பனை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

நாடு முழுவதும் தக்காளி விலை அதிகரித்து வருகிறது. வரத்து குறைவு, பயிர் சேதம், மழை போன்ற காரணங்களால் விலை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்தவும், சீரான வரத்து கிடைக்கவும் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இதன் மூலம் தலைநகர் டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் தக்காளியை தள்ளுபடி விலையில் விற்பனை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, தக்காளியை கொள்முதல் செய்து, முக்கிய நுகர்வு மையங்களுக்கு வழங்க, தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை கூட்டமைப்புக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன் அடிப்படையில் கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தக்காளி கொள்முதல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தக்காளி விலை அதிகம் உள்ள பகுதிகளில் தள்ளுபடி விலையில் விற்கவும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

வெள்ளிக்கிழமைக்குள் டெல்லியில் உள்ள சில்லறை விற்பனை மையங்கள் மூலம் தக்காளி தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.