மீண்டும் முழு ஊரடங்கு என சமூக வலைத்தளங்களில் பரவும் பொய் செய்தியால் பரபரப்பு

ஒரு சில சமூக வலைத்தளங்களிலும் வாட்ஸ் அப் உள்ளிட்ட வலைதளங்களிலும் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் முழு மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த இருப்பதாக போலி செய்திகள் வலம் வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தற்போது ஜூலை 31 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில் சென்னை, மதுரை, கோவை ஆகிய பகுதிகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாகி கொண்டே வருகிறது என்பதால் மீண்டும் இந்த மூன்று மாவட்டங்களிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப் போவதாக சமூக வலைதளங்களில் போலியான செய்திகள் பரப்பப்பட்டு வருகிறது.

ஆனால் இது முழுக்க முழுக்க வதந்தி என்றும் , சென்னை , மதுரை, கோவை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் ஞாயிறு முதல் முழு ஊரடங்கு என்ற செய்தி முற்றிலும் பொய்யான செய்தி என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற போலி செய்திகளால் மக்கள் மத்தியில் பரபரப்பும், இதனால் எப்போது வேண்டுமானாலும் முழு ஊரடங்கு விதிக்கப்படலாம் என்ற எண்ணத்தில் பொருட்கள் வாங்க ஒரே நேரத்தில் கடைகளுக்கு படையெடுப்பதால் கொரோனா பரவும் அபாயம் இருப்பதால் இதுபோன்ற செய்திகளை பரப்புபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.