50 சதவீத இட ஒதுக்கீட்டை இந்தாண்டு அமல்படுத்த முடியாது

50 சதவீத இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டு அமல்படுத்த முடியாது என்று உச்சநீதி மன்றம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என தமிழக அரசு மற்றும் அ.தி.மு.க., தி.மு.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வெற்றிபெற்றன.

அந்த 50 சதவீத இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டே நடைமுறைப்படுத்தக் கோரி செய்யப்பட்ட மேல்முறையீட்டை, உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், ஹேமந்த் குப்தா, அஜய் ரஸ்தோகி அமர்வு விசாரித்தது.

ஆனால், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 50 சதவீத இடஒதுக்கீட்டை நடப்பு கல்வி ஆண்டிலேயே அமல்படுத்த சாத்தியமில்லை என மத்திய அரசு தெரிவித்தது.

50 சதவீத இடஒதுக்கீட்டை நடப்பாண்டு எப்படி நடைமுறைப்படுத்துவது? என்பது தொடர்பான எழுத்துப்பூர்வமான வாதங்களும் தமிழக அரசு உள்ளிட்ட தரப்புகளின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் 50 சதவீத இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டு அமல்படுத்த முடியாது என தெரிவித்துள்ளது.