எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு இன்று விசாரணை

சென்னை: முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் நெடுஞ்சாலை துறையில் டெண்டர் பெறப்பட்ட விவகாரத்தில் சுமார் 4,800 கோடி அளவுக்கு ஊழல் செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து இது குறித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக விசாரணை நடத்த உத்தரவிட்டது.

மேலும் அத்துடன் சிபிஐ விசாரணைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி வழக்கு தாக்கல் செய்த நிலையில், உச்சநீதிமன்றம் அந்த வழக்கை ரத்து செய்தது.
அதன் பின்னர் மீண்டும் இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்க அனுமதி அளித்தது. லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் எடப்பாடி பழனிசாமி மீது குற்றமில்லை என்று 2018 ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட முதற்கட்ட விசாரணை அறிக்கையை லஞ்ச ஒழிப்புத்துறை ஆணையர் ஏற்கவில்லை.

இதனை அடுத்து மீண்டும் விசாரணை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.எனவே அதன்படி லஞ்ச ஒழிப்பு துறையின் ஆரம்பகட்ட விசாரணையின் அடிப்படையில் இந்த வழக்கை முடித்து வைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாதிடப்பட்டது.

இதை தொடர்ந்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதியின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஆட்சி மாற்றம் காரணமாக எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில் புதிய விசாரணை தேவையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் கூறியது. எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான டெண்டர் முறைகேடு புகார் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததையடுத்து உச்ச நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்தது.