மத்திய அரசு உண்மையை பேசுவதில்லை... காங்கிரஸ் தலைவர் குற்றச்சாட்டு

புதுடில்லி: காங்கிரஸ் தலைவர் குற்றச்சாட்டு... பெகாசஸ் உளவு விவகாரத்தில் மத்திய அரசு உண்மையை பேசுவதில்லை என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை இங்கிலாந்து சென்ற காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி, லண்டனில் உள்ள புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் ஜட்ஜ் பிசினஸ் ஸ்கூலின்(ஜேபிஎஸ்) கௌரவ விரிவுரையாளராக இருந்து வருகிறார். இவர், ‘21 ஆம் நூற்றாண்டில் கேட்பதற்கு கற்றுக் கொள்ளுதல்’ என்ற தலைப்பில் புதன்கிழமை எம்பிஏ மாணவர்கள் மத்தியில் பேசினார்.

அப்போது அவர், “அதிக எண்ணிக்கையிலான அரசியல் தலைவர்களின் செல்போன்கள் பெகாசஸ் மூலம் ஒட்டுக்கேட்கப்பட்டது. என்னுடைய செல்போன் பெகாசஸ் மூலம் ஒட்டுக்கேட்கப்படுவதாக தெரிவித்த உளவுத்துறை அதிகாரிகள் என்னை அழைத்து, செல்போனில் பேசும்போது கவனமாக இருங்கள் என்று தெரிவித்தனர். என்னுடைய செல்போன் பெகாசஸ் மூலம் ஒட்டுக்கேட்கப்பட்டது; இந்திய ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது என்றார்.

இதற்கு மத்திய அரசு மற்றும் பாஜகவினர் எதிர்வினையாற்றி வருகின்றனர். இந்நிலையில் மத்திய அரசுக்கு பதிலளித்து பேசியுள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “இந்தப் பிரச்னையை பலமுறை நாடாளுமன்றத்தில் நாங்கள் எழுப்பியிருக்கிறோம். ஆனால் மத்திய அரசு பதிலளிக்க மறுத்துவிட்டது. ராகுல்காந்தி, காங்கிரஸ் கட்சியைக் கடந்து பலரும் இந்தப் பிரச்னையை எழுப்பினர். ஆனால் இந்த விவகாரத்தில் உண்மையைத் தெரிவிக்க மத்திய அரசு விரும்பவில்லை” எனக் குறிப்பிட்டார்.

மேலும் எதிர்க்கட்சித் தலைவர்களின் செல்போன்களை அரசியல் காரணங்களுக்காக மத்திய அரசு ஒட்டுக்கேட்டதாகவும் மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம் தெரிவித்தார்.