தொடர் கனமழையால் கண்டி நகரத்தை வெள்ளம் சூழ்ந்தது

தொடர்ச்சியாக பெய்யும் கனமழை காரணமாக கண்டி நகரம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

கண்டி நகரத்திலுள்ள வங்கியொன்றின் பிரதான கட்டடத்தின் வாகன நிறுத்துமிடத்திற்கு அருகிலுள்ள பல கடைகள், இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை குறித்த கனமழையில் மூழ்கியுள்ளன.

மேலும் குறித்த இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டி, கடைகள் உள்ளிட்டவை சுமார் மூன்று அடி நீரில் மூழ்கியிருந்தன.

இதேவேளை சப்ரகமுவ, மத்திய, மேல், தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

மேலும் நாடு முழுவதும், குறிப்பாக வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, திருகோணமலை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணி நேரத்துக்கு 40-50 கிலோ மீட்டர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் அந்நிலையம் குறிப்பிட்டுள்ளது.