அமெரிக்காவில் கொரோனா காரணமாக பலியானோர் எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்தது

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதன் முதலாக கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது இந்த கொரோனா வைரஸ் உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன.

இருப்பினும், கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தற்போது உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்து 38 ஆயிரத்தை கடந்துள்ளது. குறிப்பாக அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 2 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

உலகம் முழுவதும் 2 கோடியே 97 லட்சத்து 14 ஆயிரத்து 680 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவியவர்களில் 72 லட்சத்து 53 ஆயிரத்து 719 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 60 ஆயிரத்து 866 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இருப்பினும், கொரோனாவில் இருந்து 2 கோடியே 15 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர்.

உலகம் முழுவதும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 9 லட்சத்து 38 ஆயிரத்து 385 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் 2,00,171 பேர் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்துள்ளனர்.