நாட்டை முடக்கும் தீர்மானத்தை அரசாங்கத்தால் எடுக்க முடியாது; அமைச்சர் தகவல்

அரசாங்கத்தால் எடுக்க முடியாது... நாட்டை முடக்கும் தீர்மானம் அரசாங்கத்தால் எடுக்க முடியாது அதனை சுகாதார அமைச்சு தான் தீர்மானிக்க வேண்டும் எனவும் அவர்கள் வழங்கும் விடயங்களை வைத்துக்கொண்டு தான் அரசாங்கம் முடிவெடுக்கும் என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற நிகழ்வையடுத்து, ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தபோதேஅவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது, மேலும் நாட்டில் அதிகமாக கொவிட் பரம்பலுக்கு உள்ளான தென்பகுதியில் இருந்து அமைச்சர்கள் வடபகுதிக்கு விஜயம் செய்கிற போது தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பது தொடர்பாக கேள்வியெழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த நாமல், அனைவரும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுகிற அதேவேளை நாட்டின் பொருளாதாரத்தையும் மேம்படுத்த வேண்டும் என்பதுடன், அதற்கான நடவடிக்கைகளை செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் காலத்திலும் கொவிட்19 இருந்தது. அவர்கள் எங்களைவிட மிக மோசமாக பாதிக்கப்பட்டனர். ஆனாலும் இப்போது அவர்கள் வாழ்க்கை முன்னேறிக்கொண்டுதான் செல்கிறது. நாங்களும் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

பொதுமக்களோ சுகாதார தரப்பினரோ பொருளாதாரம் முடங்குவதை விரும்பவில்லை. ஆனால் எதிர்க்கட்சியினர் விரும்புகிறார்கள் என தெரிவித்த நாமல், பொருளாதாரத்தை முடக்குவதுதான் அவர்கள் நோக்கமாக இருக்கிறது என்றும் நாடு முடக்கப்பட்டாலும் ஆவர்கள் வெளியில் நடமாடுவார்கள் என்பதுடன், அவர்கள் கருமங்களை அவர்கள் செய்வார்கள். என்றும் குறிப்பிட்டார்.

மேலும் இதைத்தான் அவர்கள் விரும்புகிறார்கள் என தெரிவித்த அவர், நாங்கள் அதை விரும்பவில்லை என்றும் பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்லவே தாங்கள் விரும்புகிறோம் என்றும் தெரிவித்தார்.