கொரோனா தொற்று தடுப்பு பணிக்காக மருந்து நிறுவனங்கள் தொடர்ந்து செயல்பட மத்திய அரசு தன் கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது. இதன்படி சுற்றுச்சூழல் அனுமதி வழங்க உத்தரவிட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக அரசு துறைகளில் ஆய்வு கூட்டங்கள் நடத்த முடியாத நிலை உள்ளது. இதனால் சுற்றுச்சூழல் அனுமதி கோரும் விண்ணப்பங்கள் மீது முடிவு எடுக்க முடியாத நிலை உள்ளது. இதனால் மருந்து நிறுவனங்கள் தொடர்ந்து செயல்பட தன் கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் சுற்றுச்சூழல் அனுமதி கோரும் திட்டங்கள் மீது முடிவு எடுக்க மாநில சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணைய கூட்டங்கள் நடத்த முடியாத நிலை உள்ளது. தற்போதைய சூழலை கருத்தில் வைத்து மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையங்கள் 'ஆன்லைன்' முறையில் கூட்டம் நடத்தி அனுமதி வழங்கலாம்.
மருந்து நிறுவன திட்டங்களுக்கு விரைந்து அனுமதி வழங்க இந்த வழிமுறை பரிந்துரைக்கப்படுகிறது. இந்த நடைமுறை செப். 30 வரை அனுமதிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.