பெண்கள் மீது மண்ணை கொட்டி உயிருடன் புதைக்க நடந்த சம்பவம்

ஆந்திரா: இரு பெண்கள் மீது மண் கொட்டி உயிருடன் புதைத்து கொலை செய்ய முயன்ற சம்பவம் ஆந்திர மாநிலத்தில் நடந்தேறியுள்ளது. இதுகுறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


ஆந்திர மாநிலம் மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள ஹரிபுரம் கிராமத்தில் இந்த படுபயங்கர சம்பவம் அரங்கேறி உள்ளது. இந்த பகுதியை சேர்ந்த தாலம்மா,சாவித்திரி ஆகியோருக்கு சொந்தமான வீட்டுமனையை அதே கிராமத்தை சேர்ந்த ஆனந்தராவ், பிரகாஷ்ராவ், ராமராவ் ஆகிய 3 பேர் ஆக்கிரமிப்பு செய்து கொண்டதாக கூறப்படுகின்றது.

தங்கள் வீட்டுமனையை திரும்ப தரக் கோரி இரண்டு பெண்களும் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் பல்வேறு போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டுமனையை ஒப்படைக்க கோரி நிலத்தின் அருகில் அமர்ந்து அவர்கள் இருவரும் போராட்டம் நடத்தினர்.

அப்போது அங்கு வந்த ஆனந்தராவ், பிரகாஷ்ராவ், ராமராவ் ஆகிய மூன்று பேரும் டிராக்டர்களில் மண்ணை அள்ளி வந்து அவர்கள் மீது கொட்டி உயிருடன் புதைத்து கொலை செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை கவனித்த அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து , மண்ணில் புதைக்கப்பட்ட இரண்டு பெண்களையும் போராடி மீட்டனர்.


தகவல் அறிந்த பலாசா போலீசார் விரைந்து சென்று பாதிக்கப்பட்ட பெண்களிடம் வாக்குமூலம் பெற்று வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

நிலத்தையும் அபகரித்துக் கொண்டு நிலத்திற்கு சொந்தக்காரர்களை உயிரோடு புதைத்து கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.