திருச்சி ஜூவல்லரியில் கொள்ளையடித்த கொள்ளையன் உடல்நலக்குறைவால் மரணம்

திருச்சி ஜுவல்லரியில் கொள்ளையடித்த கொள்ளையன் முருகன் உடல்நலக்குறைவால் இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 2ம் தேதி சத்திரம் பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் பிரபல நகைகடை லலிதா ஜுவல்லரியில் ரூபாய் 13 கோடி மதிப்புள்ள தங்க, வைர நகைகள் கொள்ளை போனது.

இந்த சம்பவத்தில், திருவாரூரைச் சேர்ந்த முருகன், அவரது அக்கா மகன் சுரேஷ், கணேசன் ஆகியோர் கொண்ட கும்பல் ஈடுபட்டது தெரிய வந்தது. இதே கும்பல் திருச்சி சமயபுரம் நெம்பர் 1 டோல்கேட் பஞ்சாப் நேஷனல் வங்கியிலும் கொள்ளையடித்தது தெரிய வர திருச்சி தனிப்படை காவல்துறையினர் அவரை தீவிரமாக தேடினர்.

சுரேஷ் செங்கம் நீதிமன்றத்திலும், முருகன் பெங்களூரூ நீதிமன்றத்திலும் சரணடைந்தனர். இவர்களிடமிருந்து கிலோ கணக்கில் நகைகள் மீட்கப்பட்டன. பின்னர், முருகன் பெங்களூரூ சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு அவரது உடல்நிலை மோசமடைந்ததால் பெங்களுரூ, சிவாஜி நகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தான்.

மருத்துவர்கள் அவருக்கு ஒருமாத காலம் அவகாசம் கொடுத்திருந்தனர். அவருடைய இடது கை, கால் வாதநோயால் செயல்படாமல் போய்விட்டது. வாய்பேச முடியாத நிலையில் எய்ட்ஸ் உள்ளிட்ட பல்வேறு நோய்களுடன் போராடி வந்த முருகன் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு 11 மணி அளவில் இறந்து விட்டார்.

தொடர்ந்து இன்று மாஜிஸ்திரேட் விசாரணைக்கு பிறகு உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு முருகனின் உடல் அவரின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என பெங்களூர் போலீசார் தகவல் தெரிவிக்கின்றனர். இறந்த முருகன் மீது சென்னையில் 12 வழக்குகளும், கர்நாடகாவில் 46 வழக்குகளும், ஆந்திராவில் ஒரு வழக்கும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.