சீனாவில் ஆற்றில் தவறி விழுந்த கல்லூரி மாணவியை காப்பாற்றிய இங்கிலாந்து தூதரக அதிகாரி

சீனாவின் சோங்கிங்கில் இங்கிலாந்து துணைத் தூதர் ஸ்டீபன் எலிசன் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு 61 வயதாகிறது. கடந்த சனிக்கிழமை இவர் அருகில் உள்ள நகருக்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது சுற்றுலா நகரமான ஜாங்ஷானில் உள்ள ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டது.

அந்த சமயத்தில் அங்கு வேடிக்கை பார்த்து கொண்டு இருந்த மாணவி ஆற்றில் தவறி விழுந்தார். அருகில் நின்று கொண்டு இருந்தவர்கள் அவரை காப்பாற்றும்படி அலறுகிறார்கள். ஆனால் யாரும் காப்பாற்ற முன்வரவில்லை. ஆற்றில் விழுந்த மாணவி நீரோட்டத்திற்கு எதிராக போராடுகிறார்.

பின்னர் மாணவி மயங்கி விடுகிறார். இதை பார்த்த தூதரக அதிகாரி எலிசன் துணிச்சலுடன் ஆற்றில் குதித்து நீச்சல் அடித்து சென்று அந்த மாணவியை காப்பாற்றி கரையேற்றுகிறார். இது குறித்த வீடியோ சீனாவின் சமூக வலைதளங்களில் பரவியது. தற்போது, ஸ்டீபன் எலிசன் சீனாவில் ஹீரோவாகி விட்டார்.

61 வயதான டிரயத்தலான் வீரரான எலிசன், ஏற்கனவே மயக்கத்தில் இருந்த அந்த பெண்ணை மீட்பதற்கு துணிச்சலாக குதித்ததாக சோங்கிங்கில் உள்ள பிரிட்டிஷ் துணைத் தூதரகம் தெரிவித்துள்ளது. இது தற்போது சமீக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.