சதுரகிரி கோயிலில் ஆடி அமாவாசை விழா பிரதோஷ வழிபாட்டுடன் தொடக்கம்
By: Nagaraj Wed, 27 July 2022 08:18:24 AM
வத்திராயிருப்பு : குவிந்த பக்தர்கள்... சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆடி அமாவாசை விழா பிரதோஷ வழிபாட்டுடன் நேற்று துவங்கியது.
தரிசனத்திற்காக தாணிப்பாறையில் ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இக்கோயிலில் ஆடி பிரதோஷம், அமாவாசையை முன்னிட்டு 25ம் தேதி முதல் வரும் 30ம் தேதி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் தாணிப்பாறை மலை அடிவாரத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். நேற்று அதிகாலை 5 மணி முதல் பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்பட்டனர். அவர்களிடமிருந்த பிளாஸ்டிக் பைகள், புகையிலை பொருட்களை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
வனத்துறை சார்பில் துணிப்பைகள் வழங்கப்பட்டன.நேற்று மதியம் 3:00 மணி வரை 13 ஆயிரம் பக்தர்கள் மலை ஏறியதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.கோயிலில் மாலை 4:30 மணிக்கு சுந்தர மகாலிங்கம், சுந்தரமகாலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு பிரதோஷ வழிபாடு நடந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.
ஏற்பாடுகளை அறங்காவலர் பெரியசாமி, செயல் அலுவலர் நாகராஜா, அறநிலையத்துறை அலுவலர்கள் செய்தனர். தீப்பற்றும் பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா என மோப்பநாய் சிமி மூலம் ஆய்வு செய்யப்பட்டது.குவியும் பக்தர்கள்நாளை(ஜூலை 28) ஆடி அமாவாசையை முன்னிட்டு தாணிப்பாறை மலையடிவார தோப்புகளில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
அறநிலையத்துறை சார்பில் மலையடிவாரம் முதல் கோயில் வரை பல இடங்களில் குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. கோயிலில் இடைவிடாது அன்னதானம் வழங்கப்படுகிறது. மலையடிவார மடங்களிலும் அன்னதானம் வழங்கப்படுகிறது.