திருப்பதி ... அன்னதானம் வழங்குவதற்காக இயற்கை முறையில் விளைவித்த நெல் வாங்க ஏற்பாடு
By: vaithegi Thu, 03 Nov 2022 6:37:08 PM
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினந்தோறும் அன்னதானம் வழங்கப்படுகிறது. பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினந்தோறும் 3 வேளை உணவு சாப்பிட்டு கொண்டு வருகின்றனர். அன்னதானத்திற்கு தேவையான பொருட்களை திருப்பதி தேவஸ்தானம் முன்கூட்டியே ஒப்பந்த அடிப்படையில் வாங்கி கொண்டு வருகிறது. மேலும் பக்தர்களும் அன்னதானத்திற்கு நன்கொடை வழங்கி வருகின்றனர்.
இதனையடுத்து இந்த ஆண்டு திருப்பதி தேவஸ்தானம் அன்னதானம் வழங்குவதற்காக இயற்கை முறையில் விளைவித்த நெல்லை வாங்குவதற்கு ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக ஆந்திர மாநில அரசுடன் திருப்பதி தேவஸ்தானம் ஒப்பந்தம் செய்துள்ளது.
ஆந்திர மாநில அரசு நெல்லூர் மாவட்ட விவசாயிகளிடமிருந்து 2,640 டன் நெல் கொள்முதல் செய்து திருப்பதி தேவஸ்தானத்திற்கு வழங்க உள்ளது. இதேபோன்று நெல்லூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளிடமிருந்து 62 மெட்ரிக் டன் நிலக்கடலையையும் கோவில் அறக்கட்டளை கொள்முதல் செய்கிறது.
இதையடுத்து இதற்காக நெல்லூர் மாவட்டத்தில் சுமார் 1,300 ஹெக்டேரில் இயற்கை விவசாய முறையில் நெல் வகைகளை பயிரிட அதிகாரிகள் இலக்கு நிர்ணயித்துள்ளனர். சுமார் 870 ஏக்கரில் சாகுபடி தொடங்கியுள்ளது. இயற்கை விவசாயத்திற்கு சான்றிதழ் வழங்குவதுடன், அதிகாரிகளுக்கு 10 சதவீதம் கூடுதல் விலையும் வழங்கப்படுகிறது.