சதுரகிரி சுந்தர மகாலிங்கம் 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி
By: vaithegi Wed, 15 Feb 2023 8:52:38 PM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி
மலையில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது.
கடல் மட்டத்திலிருந்து 5 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த கோவிலுக்கு
செல்ல மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமியை முன்னிட்டு தலா 4 நாட்கள்
பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு கொண்டு வருகின்றன.
குறிப்பாக ஆடி, தை அமாவாசை மகாளய அமாவாசை நாட்களில் மாநிலம் முழுவதும்
இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரிக்கு வருகை தருவார்கள்.
இதையடுத்து சிவபெருமானுக்கு உகந்த நாளாக கருதப்படும் மகா சிவராத்திரி
அன்றும் திரளான பக்தர்கள் வருகை தருவதுண்டு. இந்நிலையில், இந்தாண்டு வருகிற
18-ம் தேதி சிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி சதுரகிரி மலைக்கு செல்ல வருகிற 18-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை
அனுமதி வழங்கி விருதுநகர் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. காலை 7 மணி
முதல் நண்பகல் 11 மணி வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள்.
மலையேறும் பக்தர்கள் பிளாஸ்டிக் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை
கொண்டு செல்லக்கூடாது. மேலும் இரவில் கோவிலில் தங்க அனுமதி இல்லை. 60
வயதுக்கு மேற்பட்டோர் செல்ல தடை உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை வனத்துறை
விதித்துள்ளது.
இதனை அடுத்து மகா சிவராத்திரி முன்னிட்டு வழக்கத்தை
விட பக்தர்கள் கூட்டம் அதிகமாக வரும் என்பதை கருத்தில் கொண்டு மாவட்ட
நிர்வாகம் தேவையான முன்னேற்பாடு வசதிகளை செய்து கொண்டு வருகிறது. மேலும்
மழைக்குச் செல்லும் பாதைகள், கோவில், மலை அடிவாரத்தில் கூடுதல் போலீசாரும்
பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.