பக்தர்கள் வைகுண்ட வாசல் வழியாக செல்ல 10 நாட்களுக்கு அனுமதி
By: Nagaraj Thu, 01 Dec 2022 6:31:31 PM
திருமலை: ஜனவரி 2ம் தேதி முதல் 11ம் தேதி வரை 10 நாட்களுக்கு பக்தர்கள் வைகுண்ட வாசல் வழியாக செல்ல அனுமதிக்கப்படுவர்.
திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டம் அதன் தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி தலைமையில் அன்னமய்யா பவனில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு பின் ஒய்.வி.சுப்பாரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பையொட்டி ஜனவரி 2ம் தேதி முதல் 11ம் தேதி வரை 10 நாட்களுக்கு பக்தர்கள் வைகுண்ட வாசல் வழியாக செல்ல அனுமதிக்கப்படுவர்.
ஜனவரி 2ம் தேதி நேரடியாக வரும் விஐபிகளுக்கு மட்டும் விஐபி தரிசனம் நடைபெறும். ஜனவரி 2ம் தேதி முதல் 11ம் தேதி வரை திருப்பதியில் உள்ள கவுன்டர்களுக்கு தினமும் 50 ஆயிரம் வீதம் 5 லட்சம் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்படும். சர்வ தரிசனத்திற்கான டோக்கன் கவுண்டர் (இலவசம்) ஜனவரி 1 முதல் தொடங்கப்படும்.
திருப்பதியில் உள்ள கவுண்டர்கள் டோக்கன்கள் தீரும் வரை
திறந்திருக்கும்.வைகுண்ட வாயில் வழியாக தரிசனத்திற்கு நாள் ஒன்றுக்கு 25
ஆயிரம் பக்தர்கள் வீதம் 10 நாட்களுக்கு 2.5 லட்சம் பேருக்கு ₹300 தரிசன
டிக்கெட்டுகள் ஆன்லைனில் வழங்கப்படும்.
ஏழுமலையான்
மூலவர் சன்னதி கருவறை மேல் உள்ள ஆனந்தநிலையம் தங்க தகடு பதிக்கும்
பணிகளுக்காக, பிப்ரவரி 23ம்தேதி பாலாலயம் நடத்த முகூர்த்த நேரம் தேர்வு
செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும் வழக்கம்போல் மூலவர் தரிசனம் செய்ய
பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும். பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக
செலுத்திய தங்கத்தை கொண்டு ஆனந்த நிலையத்தில் தங்கதகடு பதிக்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.