சபரிமலையில் மகர ஜோதி காண குவிந்துள்ள பக்தர்கள்
By: Nagaraj Fri, 13 Jan 2023 7:12:30 PM
திருவனந்தபுரம்: சபரிமலையில் குவியும் பக்தர்கள்... கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர விளக்கு திருவிழா நடந்து வருகிறது. மகர விளக்கு திருவிழாவின் போது சபரிமலை பொன்னம்பல மலையில் அய்யப்பன் ஜோதி வடிவில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
நாடு முழுவதும் இருந்து ஐயப்ப பக்தர்கள் இருமுடி கட்டி சபரிமலைக்கு வருகின்றனர். இந்த ஆண்டுக்கான மகரஜோதி தரிசனம் நாளை மாலை நடைபெறுகிறது. அப்போது சபரிமலை பொன்னம்பல மலையில் அய்யப்பன் ஜோதியாக காட்சியளிப்பார். அப்போது பக்தர்களின் கோஷம் விண்ணைப் பிளக்கும். மகர ஜோதியை தரிசிக்க கடந்த இரண்டு நாட்களாக சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
கோயிலுக்கு வரும் பக்தர்கள் முகாமிட்டு வனப்பகுதியில் தங்கி ஜோதி தரிசனம் செய்ய உள்ளனர். நாளை ஜோதி தரிசனம் செய்த பிறகே மலையிலிருந்து இறங்கி வருவார்கள். இதனால் சன்னிதானம் மற்றும் வனப்பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சபரிமலையில் ஏராளமான பக்தர்கள் தங்கியுள்ளதால், நாளை சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
சபரிமலை செல்லும் பக்தர்கள் நாளை பகல் சன்னிதானம் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என கூறப்பட்டுள்ளது. மேலும் சன்னிதானம், பொன்னம்பலமேடு பகுதிகளிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அங்கும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையில் மகர ஜோதி தினத்தன்று ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்ட தங்கத் திருவாபரணங்கள் ஊர்வலமாக சன்னிதானத்திற்கு எடுத்துச் செல்லப்படுகின்றன.
இந்த திருவாபரண பெட்டிக்கு பல இடங்களில் பக்தர்கள் வரவேற்பு அளித்தனர். மகர ஜோதி அன்று பொன்னம்பல மலையில் ஐயப்பன் பக்தர்களுக்கு தரிசனம் தரும்போது, அய்யப்பன் திருவாபரணம் அணிந்து சன்னதியில் அருள்பாலிக்கிறார். இதனை காண சன்னிதானத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.