கண்ணனின் மலர் பாதங்கள் பதியும் அற்புத நாள் கிருஷ்ண ஜெயந்தி
By: Nagaraj Fri, 07 Aug 2020 12:23:06 PM
கண்ணன் பிறந்த நாள் வீடுகளில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படும் பண்டிகையாகும் அன்றைய தினம் சுத்தமான இடத்தில், மாக்கோலங்களினால் கோலமிட்டு, கையில் வெண்ணையுடன் தவழும் கண்ணன் படம் வைத்து, அலங்கரித்து, வாசல் முதல் சுவாமி உள்ள இடம் வரை சிறு பாதங்கள் வரைவது வழக்கம்.
அதற்குக் காரணம் உண்டு கோகுலத்தில் கண்ணன் தோழர்களுடன் கோபியர் வீடுகளில் வெண்ணை திருடும்போது, தின்னும் அவசரத்தில் கீழே சிதறிய வெண்ணையில் கண்ணனின் மலர் பாதங்கள் பதிந்து வீடு முழுவதும் வெண்ணையாகும். அதனால் அந்தக் காலத்தில் ஸ்ரீகிருஷ்ண ஜயந்தியைக் கொண்டாடும் மக்கள், வெண்ணையினால் பாதங்கள் போடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
அந்தக் காரணத்தினாலேயே இந்நாளில் மாவினால் கோலம் போடுகிறார்கள். ஒவ்வொருவர்
வீட்டிலும் கண்ணன் பிறப்பதாகவே தோன்றும் வண்ணம் தோற்றமளிக்கும்படி
சிறப்பாகக் கொணடாடப்படுவதைக் காணலாம்.
ஸ்ரீகிருஷ்ண ஜன்மாஷ்டமி
அன்று, ஸ்ரீகிருஷ்ணா அஷ்டோத்திரம், விஷ்ணு ஸஹஸ்ரநாமம் படித்து பஜனை, பாட்டு
என்றும், பலவித வாத்தியங்களுடன் இன்னிசைப் பாடல்களுடன் வழிபட வேண்டும்.
ஸ்ரீகிருஷ்ண ஜயந்தியை குடும்பத்துடன் கொண்டாட வேண்டும்.
அன்றைய
தினம் நிவேதனம் செய்வதில், அவல், வெண்ணை முக்கியமாக இடம் பெற வேண்டும்.
வெல்லச் சீடை, உப்புச்சீடை, முறுக்கு, அப்பம், வடை, பாயசம், வெண் பொங்கல்,
பால், தயிர், அவல், வெண்ணை, பழங்கள் உட்பட தேங்காய், வெற்றிலை, பாக்கு
எல்லாம் வைத்து சிறப்பாக பூஜிக்க வேண்டும்.
சிறு குழந்தைகளுக்கு பிரசாதம்
கொடுப்பதும், அந்தணருக்கு தக்ஷிணையுடன் தாம்பூலம் கொடுப்பதும் மிக
விசேஷமானதாகும்.
விஷ்ணு பகவான் 10 அவதாரங்கள் மூலம் உயிரினங்களை
காக்கும் முக்கிய வேலையை செய்துள்ளார். தன்னுடைய 9வது அவதாரமான கிருஷ்ண
அவதாரத்தை தான், கிருஷ்ண ஜெயந்தியாக நாம் கொண்டாடுகின்றோம். 10வது அவதாரம்
கலியுகம் முற்றும் போது கல்கி அவதாரமாக எடுப்பார் என புராணங்கள்
தெரிவிக்கின்றன.
அப்படிப் பட்ட முக்கிய காக்கும் தொழிலை செய்ய அவதரித்த கிருஷ்ணரை வரவேற்கும் விதமாக கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.