திருப்பதியில் பிரம்மோற்சவ விழாவில் 24 லட்சத்து 89 ஆயிரம் லட்டுகள் விற்பனை
By: vaithegi Fri, 07 Oct 2022 1:42:05 PM
திருப்பதி: திருமலை: இதுகுறித்து திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:- திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 9 நாட்களில் மொத்தம் 5 லட்சத்து 69 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
முதல் முறையாக அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் திருப்தியுடன் இலவச தரிசனத்தில் சென்று சாமி தரிசனம் செய்ய முடிந்தது பெரிய விஷயமாகும். அதில் கருடசேவை அன்று கோவிலில் 81 ஆயிரத்து 318 பக்தர்கள் இலவச தரிசனத்தில் சென்று சாமி தரிசனம் செய்தனர்.
இதனையடுத்து கருடசேவை அன்று நான்கு மாடவீதிகளில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பிரம்மோற்சவ விழாவில் 24 லட்சத்து 89 ஆயிரம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. உண்டியல் வருமானமாக ரூ.20 கோடியே 43 லட்சம் கிடைத்தது.
திருமலையில் 2 ஆயிரத்து 279 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருந்தன. 4 ஆயிரத்து 635 தேவஸ்தான பறக்கும் படை அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் போலீசார் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர் என அவர் கூறினார்.