Advertisement

சபரிமலையில் மண்டல பூஜை இன்று நடக்கிறது

By: vaithegi Tue, 27 Dec 2022 10:29:24 AM

சபரிமலையில் மண்டல பூஜை இன்று நடக்கிறது


சபரிமலை: மண்டல, மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை கோவில் நடை கடந்த மாதம் 16-ந் தேதி திறக்கப்பட்டு தினமும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். நடை திறந்த நாள் முதல் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக வந்தனர்.

இதற்கிடையே நடப்பு சீசனின் சிகர நிகழ்ச்சியான மண்டல பூஜை இன்று நடக்கிறது. திருவிதாங்கூர் மன்னராக இருந்த சித்திரை திருநாள் மகாராஜா 1973-ம் ஆண்டு சபரிமலைக்கு வழங்கிய 450 பவுன் எடையுள்ள தங்க அங்கி மண்டல பூஜைக்கு முதல் நாள் அதாவது 26-ந் தேதி மாலை 6.30 மணிக்கு அய்யப்பனுக்கு அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெறும். இந்த தங்க அங்கி ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் பத்தனம்திட்டை ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலிருந்து சபரிமலைக்கு கடந்த 23-ந் தேதி தங்க அங்கி ஊர்வலம் புறப்பட்டது. இன்று சன்னிதானம் வருகிறது இந்த ஊர்வலம் நேற்று மதியம் பம்பை கணபதி கோவில் வந்தடைந்தது. அங்கிருந்து மேளதாளம் முழங்க பக்தர்கள் தலைச்சுமையாக தங்க அங்கியை சன்னிதானத்திற்கு கொண்டு வரப்பட்டது. மாலை 5.30 மணிக்கு சன்னிதானம் வந்தடைந்த தங்க அங்கிக்கு திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் பின் 18-ம் படி வழியாக சன்னிதானத்துக்கு கொண்டு வரப்பட்டு மாலை 6.30 மணிக்கு அய்யப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டது.

sabarimala,mandal puja , சபரிமலை, மண்டல பூஜை

அதனைத்தொடர்ந்து அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பின்னர் நடைபெறும் வழக்கமான பூஜைகளுடன் இரவு 11.30 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. இன்று நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடைபெறும். 11 மணிக்கு களபாபிஷேகம் முடிந்ததும் தந்திரி கண்டரரு ராஜீவரு தலைமையில் தங்கி அங்கி அலங்காரத்துடன் ஜொலிக்கும் அய்யப்பனுக்கு பகல் 12.30 மணிக்கு மேல் மண்டல சிறப்பு பூஜை நடைபெறும்.

இதையடுத்து பகல் 1.30 மணிக்கு நடை அடைக்கப்பட்ட பிறகு மீண்டும் மாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடைபெறும். பூஜைகளுக்கு பின் இரவு 11.30 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டு மண்டல பூஜை நிறைவு பெறும். இதனால் தங்க அங்கியை சன்னிதானத்துக்கு கொண்டு வருவதையொட்டி இன்று பிற்பகலில் 18-ம் படி ஏற பக்தர்களுக்கு அனுமதியில்லை. பின் மகரவிளக்கு பூஜைக்காக கோவில் நடை மீண்டும் 30-ந் தேதி திறக்கப்படும். மகர ஜோதி தரிசனம் அடுத்த மாதம் 14-ந் தேதி நடைபெறும்.

Tags :