வடமராட்சி முருகன் ஆலய திருவிழா உற்சவத்தில் 150 அடியவர்களுக்கு மட்டுமே அனுமதி
By: Nagaraj Thu, 27 Aug 2020 07:59:40 AM
வடமராட்சி தொண்டைமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலயத் தேர்த் திருவிழா உற்சவகாலத்தில் 150 அடியவர்கள் மாத்திரம் வழிபாடு செய்ய அனுமதிக்கப்படுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ். வடமராட்சி தொண்டைமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலயத் தேர்த் திருவிழாவில் இவ்வருடம் சுகாதார நடைமுறைகளைக் கருத்திற் கொண்டு மட்டுப்படுத்தப்பட்ட அடியவர்களே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர்.
அந்த வகையில் சுகாதாரத் துறையினரது அறிவுறுத்தல்களுக்கு அமைய உற்சவகாலத்தில் 150 அடியவர்கள் மாத்திரம் வழிபாடு செய்வதற்கு அனுமதிக்கப்படுவர் எனவும், அடியவர்கள் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணத்தை எடுத்து வருதல் கட்டாயமானதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் செப்டம்பர் முதலாம் திகதி இவ்வாலய வருடாந்த மஹோற்சவப் பெருந்
திருவிழாவின் தேர்த் திருவிழா இடம்பெறவுள்ளது. இதனை முன்னிட்டுக் கொரோனா
நோய்த் தொற்றிலிருந்து பாதுகாக்கும் வகையில் பருத்தித்துறைப் பிரதேச
செயலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆலயத்திற்கு
வருகை தரும் அடியவர்கள் முகக் கவசங்களை அணிந்திருத்தல் கட்டாயமானது
என்பதுடன் சமூக இடைவெளிகளையும் கடைப்பிடிப்பது அவசியமாகும்.
அங்கப்
பிரதட்சணம், அடியளித்தல், காவடி, கற்பூரச் சட்டி எடுத்தல் போன்ற நேர்த்திக்
கடன்களுக்கும், தாகசாந்தி, அன்னதானம் என்பவற்றுக்கும் முற்றாகத் தடை
விதிக்கப்பட்டுள்ளது. தடிமன், காய்ச்சல், தும்மல், இருமல் உள்ளவர்கள்
ஆலயத்திற்கு வருகை தருவதைத் தவிர்க்க வேண்டுமெனவும்
அறிவுறுத்தப்பட்டுள்ளது.