பிரமோற்சவத்தில் பங்கேற்க சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் மட்டுமே வரணும்
By: Nagaraj Fri, 11 Sept 2020 10:00:28 PM
சிறப்பு தரிசன டிக்கெட்டுக்கு மட்டுமே அனுமதி... திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவத்தின் போது ஆன்லைனில் ரூபாய் 300 சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் மட்டுமே வர வேண்டும் என்று திருப்பதி திருமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் வருடாந்திர பிரம்மோற்சவ ஏற்பாடுகள் குறித்து தேவஸ்தான முதன்மை பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு அதிகாரி கோபிநாத் திருப்பதி காவல்துறை கண்காணிப்பாளர் ரமேஷ் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கோபிநாத் ஏழுமலையான் கோவிலில் 19 முதல் 27 வரை வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு பிரம்மோற்சவத்தின் போது கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக சுவாமி நான்கு மாட வீதிஉலா இல்லாமல் நடத்தப்பட உள்ளதாகவும், திருப்பதியில் வழங்கப்பட்டு வந்த இலவச தரிசன டிக்கெட்டுகள் ஏற்கனவே இந்த மாதம் 30 ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறியுள்ளார்.
எனவே ரூபாய் 300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் ஆன்லைனில் பெற்ற பக்தர்கள்
மட்டும் திருப்பதியில் இருந்து திருமலைக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும்
முக்கிய பிரமுகர்கள் வருகையின் போது திருப்பதி நகர காவல்துறையினருடன்
இணைந்து பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும்
கூறியுள்ளார்.
செப்டம்பர் 17 ம் தேதி முதல் புரட்டாசி மாதம்
தொடங்குவதால் தமிழகத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவதற்கான வாய்ப்பு
உள்ளதால் ரூ 300 டிக்கெட் உள்ள பக்தர்கள் மட்டுமே திருமலைக்கு
அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.