சபரிமலையில் இன்று முதல் தரிசன நேரம் குறைப்பு
By: vaithegi Wed, 18 Jan 2023 08:41:02 AM
திருவனந்தபுரம்: நாளை மறுநாள் அதிகாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு காலை 6.30 மணிக்கு நடை அடைப்பு .... 2022-2023 ஆண்டிற்கான மண்டல, மகரவிளக்கு சீசன் நடைபெற்று வருகிறது. இதையொட்டி தினமும் ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்து கொண்டு வருகிறார்கள்.
இதையடுத்து சபரிமலையில் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு மதியம் 1.30 மணிக்கு அடைக்கப்படும். அதன் பின்னர் மாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 11.30 மணி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.
இந்தநிலையில் இன்று முதல் தரிசன நேரம் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது. அதன் பின்னர் மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்படும்.சீசனையொட்டி கடந்த 15-ந் தேதி தொடங்கிய படி பூஜை நாளை வரை நடைபெறும்.
மேலும், நாளை வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.நாளை இரவு 10 மணிக்கு மாளிகப்புரத்தம்மன் குருதி நிகழ்ச்சி நடைபெறும். நாளை மறுநாள் அதிகாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு காலை 6.30 மணிக்கு நடை அடைக்கப்படும். அன்றையதினம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி இல்லை.
இதனை அடுத்து மாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை (பிப்ரவரி) 12-ந் தேதி திறக்கப்படும். சபரிமலையில் நடப்பு சீசனில் நேற்று வரை 48 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். நடப்பு சீசன் முடிய இன்னும் 2 தினங்கள் உள்ளன. இந்நாட்களில் 2 லட்சம் பேர் தரிசனம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், நடப்பு சீசனில் தரிசனம் செய்த மொத்த பக்தர்களின் எண்ணிக்கை 50 லட்சமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.