சபரிமலை கோயில் நடை இன்று திறக்கப்படுகிறது
By: vaithegi Thu, 16 Nov 2023 09:37:58 AM
சபரிமலை : மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. இதனை அடுத்து நாளை காலையில் இருந்து பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.
நாளை முதல் வருகிற டிசம்பர் 27 ஆம் தேதி வரை அதாவது 41 நாட்கள் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டிருக்கும். மண்டல பூஜை அடுத்த மாதம் 27ஆம் தேதி நடைபெறவுள்ளது. மண்டல பூஜைக்கு பிறகு மீண்டும் நடை மாலை மூடப்படும்.
அதனை தொடர்ந்து மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை நடை மீண்டும் வருகிற டிசம்பர் மாதம் 30 ஆம் தேதி மாலை நடை திறக்கப்படும்.வருகிற டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி முதல் அடுத்தாண்டு ஜனவரி 15 ஆம் தேதி மகர விளக்கு பூஜைகள் நடைபெறும்.
அன்று மாலை 6.30 மணிக்கு மகர ஜோதி தரிசனத்தை தொடர்ந்து வருகிற ஜனவரி 19 ஆம் தேதி வரை பூஜைகள் நடைபெறுகிறது. இதை தொடர்ந்து வருகிற ஜனவரி 20 ஆம் தேதி காலையில் பந்தளம் ராஜ குடும்ப பிரதிநிதி தரிசனத்திற்கு பின் கோயில் நடை அடைக்கப்படும். மேலும் இத்துடன் நடப்பு ஆண்டுக்கான மண்டல மகரவிளக்கு சீசன் நிறைவுபெறுகிறது.