பிரசித்தி பெற்ற வடபழனி முருகன் கோயில் தேரோட்டம் நடந்தது
By: Nagaraj Thu, 09 June 2022 5:53:03 PM
சென்னை: தேரோட்டம் நடந்தது... வடபழனியில் உள்ள முருகன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலில் வைகாசி விசாக பெருவிழா கடந்த 2-ந் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழச்சியான தேரோட்டம் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
கோவிலில் இருந்து புறப்பட்ட தேரோட்டம் மேற்கு மாட வீதி, வடக்கு கிழக்கு மற்றும் தெற்கு மாட வீதி, பழனி ஆண்டவர் கோவில் தெரு, தெற்கு பெருமாள் கோவில் தெரு, ஆற்காடு சாலை, நூறடி சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் வழியாக சென்று பின்னர் மீண்டும் வடபழனி கோவிலை வந்தடைந்தது.
தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம்பிடித்து இழுத்து சென்றனர். செண்டை மேளம், சிவவாத்தியங்கள் இசைக்கப்பட்டது.
தேரோட்டத்தையொட்டி அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருந்தது. இன்று இரவு 7மணிக்கு ஒய்யாளி உற்சவம் நடக்கிறது. 11-ந் தேதி இரவு 7மணிக்கு வடபழனி ஆண்டவர் திருவீதி உலா நடக்கிறது, 12-ந் தேதி காலை 9மணிக்கு வள்ளி தேவசேனா சமேத சண்முகர் வீதி உலாவும், 10மணிக்கு தீர்த்தவாரி கலசாபிஷேகமும் நடைபெற உள்ளது.
மாலை 6மணிக்கு திருக்கல்யாண உற்சவம், மயில் வாகன புறப்பாடு நடைபெறுகிறது. வருகிற 13-ந் தேதி சிறப்பு புஷ்ப பல்லக்கு வீதி உலா நடைபெறுகிறது. 14-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை தினமும் மாலை 6.30மணிக்கு பரதநாட்டியம், இசைகச்சேரி உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.
தேரோட்ட விழாவையொட்டி வடபழனி உதவி கமிஷனர் பாலமுருகன், இன்ஸ்பெக்டர் பிரவீன் ராஜேஷ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.