உலகளவில் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அதிகளவில் ‘பிம்ஸ்’ நோயால் பாதிப்பு
By: Karunakaran Tue, 13 Oct 2020 1:07:50 PM
குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை என்றாலும் அலட்சியம் வேண்டாம். அதனால் ஏற்படும் பின்விளைவு காரணமாக உலகளவில் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அதிகளவில் ‘பிம்ஸ்’ நோயால் பாதிக்கப்படுகின்றனர். கொரோனா வைரஸ் குழந்தைகளை பெரிதாக பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்று கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது கொரோனாவுக்கு பின்னர் குழந்தைகளுக்கு பல்வேறு பின்விளைவுகளை ஏற்படுத்துவதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது.
5 வயது முதல் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அதிகளவிலும் பாதிக்கப்படுகின்றனர். இந்தியாவில் ஜூன் மாதத்துக்கு பிறகுதான் இது கண்டறியப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு திடீரென காய்ச்சல், சளி மற்றும் தோல்கள் சிவந்து காணப்படுவது போன்ற அறிகுறியாக உண்டாகிறது. இங்கிலாந்து போன்ற உலக நாடுகளில், இத்தகைய பாதிப்புக்கு ‘பிம்ஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. ‘பிம்ஸ்’ குழந்தைகளின் உடல் உறுப்புகளை மெல்ல மெல்ல அமைதியான முறையில் தாக்கி பாதிப்படைய செய்யும்.
இந்த அறிகுறி வந்ததும் குழந்தைகளுக்கு கொரோனா பரிசோதனை செய்து முடிவில் மீண்டும் தொற்று இல்லை என முடிவு வரும் பட்சத்தில் பெற்றோர் அலட்சியம் காட்டி டாக்டரை அணுகாமல் இருந்து விட்டால் பிற்காலத்தில் குழந்தைகளுக்கு பெரிய அளவில் பின்விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்பு அதிகளவில் உள்ளது. முக்கியமாக குழந்தைகளின் இதயத்தை தாக்கி, அந்த குழந்தை 20 வயதை நெருங்கும்போது திடீரென மாரடைப்பு ஏற்படுத்தும் அபாயம் உண்டாகும்.
எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் ‘பிம்ஸ்’ பாதிப்புடன் வருகிற குழந்தைகளுக்கு ‘ஐ.வி.ஐ.ஜி’ எனப்படும் மருந்து மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த மருந்து மூலம் சிகிச்சை அளிக்கும்போது, குழந்தையின் உடல் உறுப்பை பாதிக்காமல் தடுக்கப்படுகிறது. ‘பிம்ஸ்’ ஆல் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை பரிசோதனை செய்த போது, அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவில் இருக்கிறது. இதன்பிறகு ‘ஐ.வி.ஐ.ஜி’ மருந்து மூலம் சிகிச்சை அளிக்கும்போது, விரைவில் அவர்கள் குணமடைகின்றனர்.