அகத்திக்கீரையில் நிறைந்துள்ள அற்புதமான நன்மைகள்!!
By: Monisha Sat, 11 July 2020 2:58:17 PM
அகத்தி மரத்தின் இலை, பூ, காய், பட்டை, வேர் ஆகிய அனைத்தும் மருந்தாக பயன்படுகின்றன. பொதுவாக அகத்தி கீரையில் இரண்டு வகை உள்ளது. அதில் ஒன்று வெள்ளை நிற பூக்களைக் கொண்டது. மற்றொன்று, சிவப்பு நிற பூக்களைக்கொண்ட செவ்வகத்தி.
அகத்திக்கீரை காய்ச்சலைக் குறைத்து உடல்சூட்டை சமன்படுத்தும் இயல்புடையது. குடல்புண், அரிப்பு, சொறிசிரங்கு, தொண்டைப்புண் மற்றும் தொண்டைவலி, தோல் நோய்கள் போன்றவற்றிற்கு இக்கீரை மிகசிறந்த மருந்தாகும்.
அகத்திக்கீரையைப் பச்சையாக மென்று சாற்றை உள்ளே விழுங்கும்போது தொண்டைப் புண், தொண்டை வலி ஆகிய நோய்கள் நீங்கும். ரத்த பித்தம், ரத்த கொதிப்பு, ஆகியவை அகத்திக்கீரையை சாப்பிடுவதால் அகலும்.
அகத்தி கீரை வயிற்றுப் புண் (அல்சர்) நோயைக் குணப்படுத்தும். இதற்கு அகத்திக்கீரையை நன்றாக கழுவி இதில் 4 பங்கு சின்ன வெங்காயத்தை சேர்த்து அகத்திக்கீரை சூப் தயாரித்து தினமும் 1 வேளை குடிக்கலாம்.
அகத்தி கீரையையும், மருதாணி இலையையும் சம அளவு எடுத்து நன்கு அரைத்து கால் வெடிப்புகளில் பற்றுப்போட்டால் வெடிப்புகள் மறையும்.
உடம்பில் காணப்படும் தேமலுக்கு அகத்தி கீரையின் இலையை தேங்காய் எண்ணெய்யில் வதக்கி, அதை விழுதாக அரைத்து பூசி வந்தால் தேமல் முற்றிலுமாக மறையும். அகத்தி கீரை சாற்றை சேற்று புண்களில் தடவி வர சேற்று புண்கள் விரைவில் ஆறிவிடும்.
அகத்திக்கீரையை வாரம் ஒரு முறை சமைத்து சாப்பிட்டால் வெயிலில் அலைவதால் ஏற்படும் வெப்பம், மலச்சிக்கல், காபி, டீ, ஆகியவற்றைக் குடிப்பதால் ஏற்படும் பித்தம் ஆகியவை நிவாரணம் கிடைக்கும்.
அகத்தி கீரையைப் சாறு பிழிந்து அதன் சாற்றை 2 துளி மூக்கில் விட்டால் காய்ச்சல் நீங்கும். அகத்தி இலைச் சாற்றை நெற்றியில் தடவி நெற்றியை இலேசாக அனலில் காண்பித்தால் கடுமையான தலைவலி, சளி, ஜலதோஷம் போன்றவை நீங்கும்.