உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்கும் உளுந்து!
By: Monisha Mon, 29 June 2020 1:06:08 PM
உடலுக்கு சக்தி அளிக்கும் உளுந்து மனித குலத்துக்கே வர பிரசாதமாக விளங்குகிறது. உளுந்தில் உள்ள இரும்புச்சத்தானது உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்கி நம்மை நாள்முழுவதும் சுறுசுறுப்பாகச் செயல்படச் செய்கிறது.
உளுந்தானது கரையும் மற்றும் கரையாத நார்ச்சத்துகளைக் கொண்டுள்ளது. இந்த நார்ச்சத்துக்கள் உணவினை நன்கு செரிக்கச் செய்வதுடன் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களையும் உடல் உறிஞ்ச உதவுகின்றன. மேலும் நார்ச்சத்தானது வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், வாயுத்தொல்லை உள்ளிட்ட செரிமான பிரச்சினைகள் ஏற்படாமல் பாதுகாக்கின்றது. செரிமான பாதையில் உள்ள செரிக்காத நச்சுப்பொருட்களை கழிவாக மாற்றி வெளியேற்றவும் இவை உதவுகின்றன. எனவே உளுந்தினை அடிக்கடி உணவில் சேர்த்து நல்ல செரிமானத்தைப் பெறலாம்.
உடல் வலு பெற உளுந்தை களியாகவோ, கஞ்சியாகவோ, அரிசியுடன் கலந்தோ உண்டு வந்தால் தேகம் வலுவடையும். எலும்பு, தசை, நரம்புகள் ஊட்டமடைந்து உடல் வச்சிரமாகும். சுக்கு, வெந்தயம், தவிடு நீக்காத பச்சரிசியுடன் உளுந்து சேர்த்து, பனை வெல்லம் கலந்து களி செய்து சாப்பிடால் உடல் சூடு தணியும். உளுந்தை காயவைத்து அப்படியே அரைத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டுவந்தால் தாது விருத்தியாகும்.
எலும்பு, தசை முறிவு மற்றும் இரத்தக் கட்டிகள் குணமாக உளுந்து சிறந்த மருந்து. நாற்பது வயதைக் கடந்த பெண்களுக்கும், பருவம் அடைந்த பெண்களுக்கும் கண்டிப்பாக ஊட்டச்சத்து அதிகம் தேவை. உளுந்தை நன்கு பொடி செய்து சலித்து வைத்து அதனுடன் தேவையான அளவு முட்டையின் வெள்ளை கரு கலந்து கலக்கி அடிபட்ட இடத்தில் தடவி கட்டு போட்டால் இரத்தக்கட்டு விரைவில் நீங்கும். இடுப்பு வலுவில்லாமல் இருப்பவர்கள் உளுந்து களி செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் இடுப்பு வலி நீங்கும்.