அஜீரணத்தை போக்கும் வீட்டு மருத்துவ வழிமுறைகள்
By: Nagaraj Sat, 17 Sept 2022 5:49:36 PM
சென்னை: அஜீரணத்தை போக்கும் வழிகள்... இன்றைய வாழ்க்கை முறையில் துரித உணவுகள், சரியான நேரத்தில் உணவு உட்கொள்ளாதது, காலை நேரங்களில் உணவுகளை தவிர்ப்பது போன்ற பல காரணங்களால் பலரும் அஜீரண கோளாறால் சிரமப்பட்டு வருகின்றனர். இதை போக்கும் வழிகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
வயிற்றில் ஏற்படும் அஜீரணக் கோளாறு மருத்துவத் துறையில் டிஸ்பெப்சியா (dyspepsia) என அழைக்கப்படுகிறது. சரியாக சாப்பிடாதவர்கள், ஜீரணக் கோளாறு இருப்பவர்களுக்கு அஜீரணம் ஏற்பட வாய்ப்புள்ளது. வயிறு உப்புசமாக உணர்ந்தாலோ, வயிறு வலித்தாலோ அஃது அஜீரணமாக இருக்கலாம்.
அஜீரணம் ஏற்பட பல காரணிகள் உண்டு. காரமான உணவு, சாப்பிட்டவுடன் படுப்பது, மன இருக்கம், பதற்றம், மது அருந்துதல், புகைபிடித்தல் ஆகியவை அஜீரணம் ஏற்பட காரணிகளாக உள்ளன.
இரைப்பைப் புற்றுநோய் (stomach cancer), இரைப்பை அழற்சி (gastritis), குடற்புண் (peptic ulcers), பித்தப்பைக் கல் (gallstones), கணைய அழற்சி (pancreatitis) ஆகிய நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அஜீரணம் ஏற்பட வாய்ப்புள்ளது.
அஜீரணத்திற்கான அறிகுறிகள்: வாய் குமட்டுதல், வாய் துர்நாற்றம், வயிற்று வலி, நெஞ்செரிச்சல், வாய் புளித்தல், வயிற்றுப்போக்கு, பசியின்மை, வாயு தொல்லை, வயிறு உப்புசம்.
அஜீரணத்தை குணமாக்கும் வீட்டு வைத்தியம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். இஞ்சி: உணவுடன் இஞ்சி சேர்த்துக் கொள்ளலாம் அல்லது இஞ்சி தேநீர் அருந்தலாம். இஞ்சியில் ஆண்டி ஆக்சிடண்ட் இருப்பதால் அஜீரணத்தை குணப்படுத்த உதவும். இஞ்சியில் வலி மற்றும் அழற்சியை குணப்படுத்தும் தன்மை உள்ளது.
எலுமிச்சை: சாப்பிட்ட பிறகு எலுமிச்சை ஜூஸ் குடித்தால் வயிற்றெரிச்சல் மற்றும் வயிற்று வலி குறையும்.
புதினா: குடல் தசைகளை மிருதுவாக்க புதினா உதவுவதுடன் வாய் துர்நாற்றத்தை நீக்கும், வாய் குமட்டுதலை குணமாக்கும். சாப்பிட்ட பிறகு புதினா இலைகள் அல்லது புதினா தேநீர் பருகலாம்.
நெல்லிக்காய்: நாளுக்கு ஒருமுறை நெல்லிக்காய் சாப்பிட்டு வர அஜீரண கோளாறு நீங்கும்.