வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத உணவு பொருட்கள் பற்றி தெரிந்து கொள்வோம்
By: Nagaraj Tue, 12 July 2022 09:18:25 AM
சென்னை: வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிட்டால் தேவையற்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். வெறும் வயிற்றில் சில உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். காலையில் சாப்பிடும் உணவு சத்தானதாகவும், குடல் ஆரோக்கியத்திற்கு உகந்ததாகவும் இருக்க வேண்டும். விரும்பிய உணவை எப்போது வேண்டுமானாலும் சாப்பிடலாம்.
ஆனால் வெறும் வயிற்றில் சில உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அப்படிப்பட்ட 5 உணவுகள் பற்றி தெரிந்து கொள்வோம்.
வாழைப்பழம்: நிறைய பேர் பசியை கட்டுப்படுத்துவதற்காக வாழைப்பழம் சாப்பிடுவார்கள். இது குடல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும். மலச்சிக்கலை போக்கவும் உதவும். வாழைப்பழத்தில் மெக்னீசியம், பொட்டாசியம் உள்பட ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இருப்பினும் வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிட்டால் ரத்தத்தில் மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் அளவுகளில் ஏற்றத்தாழ்வுக்கு வழிவகுக்கும். அதனால் தேவையற்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும்.
காபி: காலையில் எழுந்ததும் காபி பருகும் வழக்கத்தை பலரும்
பின்பற்றுகிறார்கள். ஆனால் வெறும் வயிற்றில் காபி பருகுவது உடலில்
அமிலத்தன்மை அளவு அதிகரிப்பதற்கு வழிவகுக்கும். அதன் காரணமாக நாள்
முழுவதும் அஜீரணம் அல்லது நெஞ்செரிச்சல் பிரச்சினையை அனுபவிக்கக்கூடும்.
எனவே காலையில் எழுந்தவுடன் காபி பருகுவதற்கு முன்பு ஏதாவதொரு உணவு பொருளை
சாப்பிடுவது நல்லது.
தயிர்: இதில் புரதம், வைட்டமின்கள் மற்றும்
தாதுக்கள் நிறைந்திருக்கும். வீட்டில் தயாரிக்கப்பட்ட தயிராக இருந்தாலும்,
கடையில் வாங்கியதாக இருந்தாலும் அதில் லாக்டிக் அமிலம் இருப்பதால் வெறும்
வயிற்றில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதில் இருக்கும் பாக்டீரியாக்கள்
வயிற்றில் உள்ள அமிலங்களுக்கு இடையூறு விளைவிக்கும். அதனால் வெறும்
வயிற்றில் சாப்பிடக்கூடாது. காலையில் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு
விட்டு சிறிது நேரம் கழித்து தயிர் உட்கொள்ளலாம்.
தக்காளி: இதில்
இருக்கும் லைகோபீன் உடல் நலத்துக்கு நலம் பயக்கும். ஆனாலும் தக்காளி வெறும்
வயிற்றில் சாப்பிடுவதற்கு உகந்ததல்ல. அதில் இருக்கும் டானிக் அமிலம்
இரைப்பை அமிலத்துடன் வினைபுரியும். அதன் காரணமாக வயிற்றில் எரிச்சல்,
அசவுகரியம் உண்டாகும். மதிய உணவின்போது தக்காளியை சேர்த்துக்கொள்வது
நல்லது. சாலட்டுகளிலும் சேர்த்து உட்கொள்ளலாம்.
பச்சை காய்கறிகள்:
இதில் நார்ச்சத்து மிகுந்திருக்கும். ஆனாலும் வெறும் வயிற்றில் காய்கறிகளை
அப்படியே சாப்பிடும்போது அஜீரணம், வயிறு வீக்கம், மலச்சிக்கல் போன்ற
பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும். காலை உணவில் காய்கறிகளை சேர்த்து
உட்கொள்ளலாம். வெறும் வயிற்றில் வெறுமனே காய்கறிகளை சாப்பிடக் கூடாது.
சரியான நேரத்தில் சரியான உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவதன் மூலம்
உடல்நலம் தொடர்பான பெரும்பாலான பிரச்சினைகளை தவிர்க்க முடியும்.