பல நோய்களை போக்கும் மருத்துவ குணம் நிறைந்த ரணகள்ளி இலை
By: Nagaraj Mon, 16 Jan 2023 10:37:15 PM
சென்னை: ரணகள்ளி இலை மனித உடலில் ஏற்படும் பல்வேறு நோய்களை குணமாக்கும் சக்தி வாய்ந்த தாவரமாக விளங்குகிறது. கண், காது, குடல், காய்ச்சல், மஞ்சள் காமாலை போன்ற பலநோய்களையும் குணப்படுத்தக்கூடியது.
ரணகள்ளி இலை பசை போன்ற திரவத்தை கொண்டுள்ளது. இந்த இலை அமிலத்தன்மையுடனும் உவர்ப்புத்தன்மையையும் கொண்டிருக்கும்.
மிகச்சிறிய தாவர வகையைச் சேர்ந்தது ரணகள்ளி. இதை அழகுக்காக பலர் வீடுகளில் வளர்க்கிறார்கள். வெப்பம் நிறைந்த பகுதியில் இவை காணப்படும். ரணகள்ளி பெரும்பாலும் அலங்கார தாவரமாக பயன்படுத்தப்பட்டாலும் இது முக்கிய மூலிகைகளில் ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. ஆயுர்வேதத்தில் இது எந்த நோய்க்கு எப்படி பயன்படுத்தப்படுகிறது என்பதை பார்க்கலாம்.
இதன் இலைகளை நசுக்கி சாறெடுத்து கண்களை சுற்றி தடவி வந்தால் கண் வலி நீங்கும். இதன் சாறு மஞ்சள் காமாலை நோய்யை குணப்படுத்த உதவுகிறது. ரணகள்ளி இலைகளை நன்கு உலர வைத்து அதன்பின் தேநீர் தயாரித்து குடித்து வந்தால் மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
வயிற்றுப்போக்கிலிருந்து நிவாரணம் பெற இதன் இலைகளிலிருந்து சாறு எடுத்து அதில் தேன் கலந்து குடித்து வந்தால் குணமாகும். காயங்கள் ஏற்பட்டால் சிறிது ரணகள்ளி இலைகளை எடுத்து மிதமான தீயில் சூடாக்கி நசுக்கி காயத்தின் மீது வைத்து கட்டி வந்தால் விரைவில் குணமாகும்.
ரணகள்ளி சாற்றை குடித்து வந்தால் காய்ச்சல் தணியும். இந்த இலைகளில் உள்ள ஆண்டிபிரைடிக் பண்பு காய்ச்சலின் அறிகுறிகளை போக்க உதவும். இது கல்லீரலின் செயல்பாட்டையும் அதிகரிக்கும். சிறுநீரகம் தொடர்பான நோய்களை குணப்படுத்த ரணகள்ளி சாறு குடித்து வர விரைவில் நோய் குணமாகும்.