உடல் ஆரோக்கியமாக இருக்கணுமா... உப்பு அளவாக இருக்கணும்!!!
By: Nagaraj Fri, 10 June 2022 11:15:38 PM
சென்னை: உப்பும் சர்க்கரையும் இல்லாத சமையலறை எங்குமே இல்லை. அந்த அளவுக்கு இந்த இரண்டு வெள்ளை உணவுகளும் நம் நாக்கை அடிமைப்படுத்தி வைத்திருக்கின்றன.
உடலுக்கு உப்பும் சர்க்கரையும் அவசியம்தான் அதே நேரத்தில் இரண்டும் அளவோடு இருக்க வேண்டும் என்பதை மறந்ததால்தான் இப்போது, உடல்பருமன், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மாரடைப்பு என எண்ணற்ற நோய்கள் வரிசைகட்டுகின்றன.
இந்நிலையில், அதற்கு சாட்சியாக, உலகம் முழுவதும் அதிக அளவு உப்பை பயன்படுத்துவதன் மூலம் வருடத்திற்கு 25 லட்சம் பேர் வரை உயிரிழப்பதாகவும், லட்சக்கணக்கானவர்கள் இதயநோய் தாக்குதலுக்கு ஆளாவதாகவும் 'உப்பு பயன்பாடு' பற்றி, சமீபத்தில் உலக சுகாதார அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதற்கு காரணம், அதிக உப்பினால் எந்த மாதிரியான பிரச்னைகள் வரும்... ஒரு
நாளுக்கு எவ்வளவு உப்பு போதுமானது... என்பது பற்றியெல்லாம் விழிப்புணர்வு
இல்லாததுதான். உடல் ஆரோக்கியத்தில் மிக முக்கிய பங்கு வகிப்பது சோடியம்
எனப்படும் இந்த சமையல் உப்பு தான். உயிர் வாழ்வதற்கு மிகவும் அவசியமான இந்த
சோடியம், பெரும்பாலும் உப்பு மூலமாகவே கிடைக்கிறது.
உப்பு, மனித
ஆரோக்கியத்துக்குப் பாதகமாக மாறிவருவது தற்போதைய தலைமுறையில்தான். மனிதன்,
உணவிற்காக விவசாயத்துக்கு மாறியபோது, உணவில் சேர்த்தது வெறும் 2 கிராம்
உப்புதான். ஆனால் மாறிவிட்ட வாழ்க்கை முறையில் உணவுப் பழக்கத்தால் இப்போது
சராசரியாக அமெரிக்கன் 10 கிராமும், இந்தியன் 12 கிராம் வரையும் உப்பினை
எடுத்துக்கொள்வதாக ஆய்வுகள் சொல்கின்றன.