வங்கியில் வேலை செய்த பெண் ஊழியர் திடீர் தீக்குளிப்பு
By: Monisha Thu, 04 June 2020 2:34:49 PM
கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள பூதக்குளம் கூட்டுறவு வங்கியில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வந்தவர் சத்தியவதி. நேற்று வழக்கம்போல் வங்கியில் வேலை செய்துகொண்டிருந்தார் சத்தியவதி.
இந்தநிலையில், பிற்பகலின் போது திடீரென தன மீது அவர் தீவைத்துக்கொண்டார். இதனால் சக ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடல் முழுவதும் கருகிய சத்தியவதி, சிறிது நேரத்தில் உயிரிழந்தார்.
இதுபற்றி காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சத்தியவதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஊழியர் தற்கொலை செய்தது பற்றி தகவல் வெளியானதும் வங்கியின் வெளியே ஏராளமானோர் திரண்டனர்.
தற்காலிக கலெக்சன் ஏஜென்டாக வேலை செய்து வந்த சத்தியவதி தன்னை பணிநிரந்தரம் செய்யும்படி வங்கி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை வைத்துள்ளார். ஆனால் அவர் நிரந்தரம் செய்யப்படவில்லை. இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.