தியானத்தை அதற்குரிய உகந்த நேரத்தில் செய்தால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்
By: Karunakaran Mon, 12 Oct 2020 2:07:46 PM
சூரியன் உதயத்திற்கு முன் தியானத்தை முடித்து கொள்ள வேண்டும். இயற்கை சமச்சீராக இருக்கும் தருணம் அதுவே. அந்தி சாயும் மாலை நேரமும் உகந்த தருணம். சூரியன் மறைந்து நிலவு தோன்றும் நேரம் தியானம் செய்ய உகந்த நேரம். தியானம் ஆழ்மனதில் அமைதியை கொடுக்கும். இந்த அமைதி அனைத்தையும் மாற்றி அமைக்கும் அற்புதம். நாம் அமைதியாக இருக்கும் போது ஒரு ஆற்றல் பெருக்கெடுக்கும். அந்த ஆற்றல் நம் இதயப்பகுதியில் இருக்கும் ரத்த நாளங்களில் ரத்தம் சீராக பாயச் செய்கிறது.
மனிதனுக்குள் புதைந்துள்ள நோய் எதிர்ப்பு சக்தியை துாண்டி விட உதவுகிறது. இதனால் மனிதன் எந்த நோயிலும் மாட்டிக் கொள்ள மாட்டான். ஆழ்ந்த துாக்கம் இல்லாத மனிதர்கள் 80 சதவீதம் உள்ளனர். தியானம் ஆழ்ந்த உறக்கத்தை கொடுக்கும். எதை வேண்டுமானாலும் பணத்தால் வாங்கும் சக்தி படைத்த மனிதா, உன்னால் நிம்மதியை வாங்க முடியுமா. அதை தியானம் கொடுக்கும். ஒரு அரசனை போல மகிழ்ச்சியாக வாழ கற்று தருவதும், எவ்வளவு செல்வங்கள் இருந்தாலும் பிச்சைகாரரை போல இருக்க செய்வதும் தியானம்.
தியானம் ஆசைகளை குறைத்து ஆனந்தத்தை பெருக்க உதவி செய்யும். உடலில் உள்ள உயர்ந்த சக்திகள் கொண்ட சக்கரங்களை சுழலச்செய்யும் அற்புத ஆற்றல் தியானத்திற்கு உண்டு.குடும்ப வாழ்க்கையைசரியாக வாழ்ந்து கொள்ளவும் பணியினை தொய்வில்லாது செய்யவும் தியானம் உதவி புரியும். ஒரு கனிஉள்ளிருந்து தான் பழமாக மாறுமே தவிர வெளியில் இருந்து அல்ல. மனிதன் செல்வ வளர்ச்சி அடைவதை காட்டிலும் உள்ளத்தில் நல்ல வளர்ச்சி அடைய வேண்டும். தொடர்ந்து தியானம் செய்தால் மனம் விரிவடைகிறது. நம் வாழ்க்கை தர்மம் விரிவடைய வாய்ப்பாக அமைகிறது.
இன்றைய வாழ்க்கையில் தியானம், யோகா, மூச்சுபயிற்சி இதில் ஒன்றையாவது நாம் பின்பற்றாவிட்டால் உடல், மன வலிமை குன்றி விடுவோம். தியானம் செய்ய வயது 50 ஐ தாண்ட வேண்டும் என இன்று நினைக்கின்றனர். இது கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வதற்கு சமம். உட்கார்ந்து எழுந்திருக்க முடியாத வயதில் எப்படி தியானம் செய்ய முடியும். சிறு குழந்தை பருவத்திலேயே நல்ல எண்ணங்கள், சிந்தனையை துாண்டக்கூடிய தியான பயிற்சியை கற்றுகொடுப்பது பெற்றோர்களது கடமையாகும்.