- வீடு›
- உடல்நலம்›
- ஊரடங்கு முடிந்து வெகு நாட்களுக்கு பிறகு அலுவலகம் செல்லும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்
ஊரடங்கு முடிந்து வெகு நாட்களுக்கு பிறகு அலுவலகம் செல்லும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்
By: Karunakaran Fri, 18 Sept 2020 6:10:44 PM
வெகுநாட்களாக பயன்பாட்டில் இல்லாத பொருட்களை தூசி தட்டி, அலுவலக வாழ்க்கைக்கு பத்திரப்படுத்துவது அவசியம். ஊரடங்கு முடிவுக்கு வந்து வெகு நாட்களுக்கு பிறகு அலுவலகம் செல்லும்போது சில விஷயங்களை மறந்துவிடுவது வழக்கம். அலுவலக அடையாள அட்டை, அலுவலக சம்பந்தமான கோப்புகள், அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டிய ரசீதுகள், வாடிக்கையாளர்களிடம் பெற்ற காசோலை, கணக்கு விவர அறிக்கைகள் போன்றவற்றை பத்திரமாக எடுத்துக்கொள்ளுங்கள்.
வெகுநாட்களாக ‘ஸ்டார்ட்' செய்யாத வாகனங்களை ஸ்டார்ட் செய்து, அதன் தன்மையை பரிசோதியுங்கள். ஹெல்மெட் சுத்தமாக இருக்கிறதா என்பதை முன்கூட்டியே சோதிப்பது நல்லது. அலுவலகத்தில் அணிந்து செல்லக்கூடிய காலணிகளும், சாக்ஸ்களும் சுத்தமாக இருக்கிறதா? என்பதை சோதிப்பது நல்லது. வெகுநாட்களாக பயன்படுத்தாத காலணி களுக்குள், விஷ பூச்சிகள் தங்கியிருக்க வாய்ப்புண்டு.
ஓட்டுநர் உரிமத்தையும், வாகன காப்பீட்டையும் மறந்துவிடாமல் எடுத்து செல்வது நல்லது. அதேசமயம், வாகனத்தின் காப்பீடு காலாவதி ஆகிவிட்டதா என்பதையும் சோதித்து கொள்ளுங்கள். அலுவலகப் பொருட்களுடன் உயிர் காக்கும் பொருட்களான முக கவசம் மற்றும் கிருமிநாசினி ஆகியவற்றையும் கையோடு எடுத்து செல்லுங்கள். கூட்டமான பேருந்துகளையும், கூட்ட நெரிசலான பயண நேரங்களை தவிர்ப்பது நல்லது. முன்கூட்டியே பேருந்து நிலையம் வருவது, நெருக்கடியிலிருந்து விடுபட உதவும்.
ஊரடங்கு முடிந்தாலும் இயல்பு நிலைக்கு திரும்ப சில காலம் தேவைப்படும் என்பதால், சில நாட்களுக்கு வீட்டிலிருந்து மதிய உணவு கொண்டு வருவது நல்லது. அலுவலகம் செல்லும்போது மோர், சீரக தண்ணீர், வெள்ளரி போன்ற கோடைகால உணவுகளையும் கையோடு எடுத்து செல்லுங்கள். அலுவலகம் செல்லும்போதும், வீடு திரும்பும்போதும் முன் பின் அறிமுகம் இல்லாத நபர்களுக்கு ‘லிப்ட்' கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும், அலுவலகத்தில் சமூக இடைவெளியுடன் பழகுவது, உங்களையும், உங்களது நட்பையும் வெகுகாலம் உயிர்ப்புடன் வைத்திருக்கும்.